2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

பறிபோனது ஷரபோவாவின் ஐ.நா தூதுவர் பதவி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 16 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பாவனை காரணமாக இடைக்காலத் தடைக்குள்ளாக்கப்பட்டுள்ள ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவாவின், ஐக்கிய நாடுகளின் நல்லெண்ணத் தூதுவர் பதவி, இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெல்டோனியம் என்ற ஒரு வகையான ஊக்கமருந்துப் பதார்த்தத்தை உட்கொண்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டே, மரியா ஷரபோவாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அவ்விடயம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையிலேயே, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கு அவர் நல்லெண்ணத் தூதுவராக இருந்து வந்த நிலையில், அப்பதவியே இடைநிறுத்தப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு முதல் அப்பதவியை அவர் வகித்து வந்த நிலையில், தங்களது அமைப்பின் பணிகளுக்கு அவர் வழங்கிவந்த ஆதரவுக்கு, நன்றியறிதலுடன் இருப்பதாக, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்நிலை வீராங்கனையான மரியா ஷரபோவா, உடலாரோக்கியக் காரணங்களுக்காகக் கடந்த 10 ஆண்டுகளாக குறித்த மருந்தைப் பயன்படுத்தி வந்ததாகவும், இவ்வாண்டு ஜனவரி முதல் அது தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டமையைக் கவனித்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .