2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

றியோ ஒலிம்பிக்கில் 'ரஷ்ய வீரர்கள் பங்குபற்றக் கூடாது'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 17 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடகளச் சம்மேளனங்களுக்கான சர்வதேசச் சங்கத்தின் உலக உள்ளக சம்பியன்ஷிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த தடகள வீரர்கள், இத்தொடரில் பங்குபற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டதால் பங்குபற்றியிருக்கவில்லை.

இந்நிலையில், இந்தத் தடை, இவ்வாண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளிலும் தொடர வேண்டுமென, பிரித்தானியாவைச் சேர்ந்த தடகள வீரரான லின்சி ஷார்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்பட்டு, ஊக்கமருந்துப் பாவனை இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டி, ரஷ்ய தடகளச் சம்மேளனத்தை, தடகளச் சம்மேளனங்களுக்கான சர்வதேசச் சங்கம், கடந்தாண்டு நவம்பரில் இடைக்காலத்தடைக்கு உள்ளாக்கியிருந்தது. இதனால், அந்நாட்டு வீரர்கள், போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

800 மீற்றர் ஓட்ட வீராங்கனையான 25 வயதான லின்சி ஷார்ப், 2012ஆம் ஆண்டில் ஐரோப்பிய சம்பியனாக இருந்ததோடு, 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டுக்களிலும் வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார்.

'அவர்களிடம் கட்டமைப்பொன்று இருப்பதாக அவர்கள் (ரஷ்யா) வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என நான் நினைக்கவில்லை. அங்கு நடைபெறுவதைப் பார்க்கும் போது, எங்களுடன் அவர்கள் எப்படிப் போட்டியிட முடியுமென நினைப்பது, எமக்குக் கடினமானது" என அவர் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு ஐரோப்பிய சம்பியன் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த லின்சி, முதலிடத்தைப் பெற்ற ரஷ்ய வீராங்கனையான யெனிலா அர்ஸகோவாவின் பதக்கம், ஊக்கமருந்துப் பாவனை காரணமாகப் பறிக்கப்பட்டபோது, தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .