2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

றொஷென் சில்வாவுக்கு கிடைக்குமா வாய்ப்பு?

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 30 , மு.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஏ அணி, டரம் பிராந்திய அணியுடனான தனது முதலாவது நான்கு நாள் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை ஏ அணியின் தலைவர் அஷான் பிரியஞ்சன், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி, தமது முதலாவது இன்னிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 353 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் றொஷேன் சில்வா 109, சச்சித் பத்திரண 51 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் டரம் அணி சார்பாக, குர்ஜித் சந்து 4, போல் கௌலின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸை ஆடிய டரம் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக கோர்டன் முச்சால் 70 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் விஷ்வ பெர்ணான்டோ 5, லஹிரு கமகே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து, தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி, மூன்றாம் நாளில் 42 ஓவர்கள் மட்டுமே ஆடிய நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்ததோடு, நான்காவது நாள் ஆட்டமும் மழை காரணமாக முழுமையாக இடம்பெற்றிருக்கவில்லை. குறித்த இன்னிங்ஸில் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தபோது, இலங்கை ஏ அணி, இரண்டு விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில், மஹேல உடவத்த 45, றொஷேன் சில்வா 43 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றிருந்தனர். பந்துவீச்சில் டரம் சார்பாக ஜோஷ் கௌலின்,  றயான் பிறிங்கிள் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றியிருந்தார்.

27 வயதான றொஷேன் சில்வா, இதுவரை 85 முதற்தரப் போட்டிகளில் பங்குபற்றி, 17 சதங்கள் உட்பட 50.97 என்ற சராசரியில் ஓட்டங்களைப் பெற்றுள்ள போதிலும், இதுவரையிலும் டெஸ்ட் போட்டிகளுக்கான குழாமில் வாய்ப்புகள் வழங்கப்படாத நிலையில், இந்தப் பெறுபேறாவது, அவருக்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .