2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'எதிர்கால சந்ததியினருக்காக யுத்தத்தைத் தவிர்ப்பதற்கு ஆதாரங்களை நிறுவுவோம்'

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நாங்கள் இன்னுமொரு யுத்தம் உருவாவதைத் தவிர்ப்பது எப்படி என்று வரப்போகின்ற சந்ததிக்கு ஆதாரங்களை நிறுவ வேண்டுமென, சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளரும் ஆய்வாளரும், எழுத்தாளருமான பெரியசாமி முத்துலிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண உண்மை, நீதி, மற்றும் நல்லிணக்கத்துக்கான அரங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியில் மட்டக்களப்பு கல்லடி விடுதியில் நேற்று (27) நடைபெற்ற சந்திப்பில் செயற்திட்டங்கள் பற்றி விளக்கிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அமுலாக்கப்படும் செயற்திட்டங்களை விவரித்த அவர்,

'கடந்த கால யுத்தத்தின் விளைவாக சிவிலியன்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களைப் பற்றிய முறையான தகவல்கள் இல்லை, அடிமட்டத்திலிருந்து இத்தகைய விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

போரின் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் அழிவுகளைப் பற்றி நினைவு கூறல் என்பதும் ஒரு உளவியல் ஆறுதலாக இருக்கும். அதேவேளை அது கடந்த கால கசப்பான அனுபவங்களை எதிர்கால சமூகம்  தொடரக் கூடாது என்பதற்கான ஒரு எச்சரிக்கை அறிவுறுத்தலாக இருக்கும்.

9 மாகாணங்களிலும் தகவல் திரட்டப்பட வேண்டும். இதற்கான ஒரு முறையான ஆவணப்படுத்தல் பயிற்சி ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ளது.

சரீர வரைபடமிடுதல் எனும் பெண்களுக்கான Body Mapping பயிற்சி மே மாதம் 6-10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

அதேவேளை யுத்தத்தின்போது இறந்தவர்களின் மரபணுப் பரிசோதனை சம்பந்தப்பட்ட ஒரு பயிற்சி  கௌத்தமாலாவில் நாட்டில் இடம்பெறவுள்ளது. இதற்கென 13 பேர் இலங்கையிலிருந்து செல்லவுள்ளனர்.

நாங்கள் இன்னுமொரு யுத்தம் உருவாவதைத் தவிர்ப்பது எப்படி ? சர்வதேச ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள், தேசிய ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள், பற்றி தெளிவுடன் இருக்க வேண்டும்.

இன்னுமொரு 30 வருடங்களுக்குள் இந்த மக்கள் இன்னுமொரு கட்டத்திற்குள் நகர வேண்டும் என்றால் மக்கள் இப்பொழுது சிறிதளவாவது மூச்சு விட்டு எழ வேண்டும் அதற்கான சூழ்நிலைகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அரசியல் ரீதியாக வேறு கருத்துக்கள் இருந்தாலும், இந்தக் காலகட்டத்தில் எமது மக்கள் பட்ட துன்பங்களை நாங்கள் நினைத்துப் பார்ப்பது ஒன்று, அதை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வது மற்றொன்று.

இந்த இரண்டு கருமங்களும் இந்த நிலைமாறு கால நீதிப் பொறிமுறைக் காலத்தில் நிறைவேற்றப்பட்டால்தான் நாம் எதையாவது சாதிக்க முடியும்' என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X