2026 மே 14, வியாழக்கிழமை

dd

கச்சக்கொடிசுவாமிமலையில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சியை தடுக்கவும்: அரியநேத்திரன் எம்.பி

Menaka Mookandi   / 2012 ஜனவரி 26 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கச்சக்கொடிசுவாமிமலை பிரதேசத்தில் பௌத்த விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கச்சக்கொடிசுவாமிமலையில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் மாவட்ட அரசாங்க அதிகபரிடம் இந்தக் கோரிக்கையினை விடுத்தள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக பெரும்பான்மையினத்தவர்களினால் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளில் மேற்கொள்ளப்பட்டுவந்த அத்துமீறிய செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுவந்தன. தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் நிரந்தர நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது அவசியமாகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கச்சக்கொடிசுவாமிமலை பகுதிக்கு வந்த புத்த பிக்கு ஒருவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்த சிலரும் அப்பகுதியில் விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று இன்றும், அன்றும் படையினர் சகிதம் வானில் வந்த பௌத்த பிக்குகள் குறித்த பகுதியை பார்வையிட்டுள்ளதுடன் அவற்றினை துப்புரவு செய்யும் ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர். இப்பகுதி காலம்காலமாக தமிழர்கள் வாழ்ந்துவரும் பகுதி என்பதுடன் தமிழர்களின் பாரம்பரியங்களை சுமந்த பகுதியாகவும் உள்ளன.

இது தொடர்பில் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதுடன் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் கவனத்துக்கும் கொண்டுவந்துள்ளேன். எனவே இவற்றினை தடுத்து நிறுத்த மாவட்ட அரசாங்க அதிபர் என்றவகையில் உடன் நடவடிக்கையெடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்' என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .