2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

திவிநெகும சட்டமூலத்தினால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு இல்லை: ஹாபிஸ் நஷீர்

Super User   / 2012 ஒக்டோபர் 02 , பி.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

திவிநெகும சட்டமூலத்தினால் சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான ஹாபிஸ் நஷீர் அஹமட் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இதன் காரணமாகவே கிழக்கு மாகாண சபையில் இந்த சட்டமூலம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது எமது கட்சி ஆதரவாக வாக்களித்தது என அவர் குறிப்பிட்டார்.

இந்த திவிநெகும சட்டமூலத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள எந்த அதிகாரங்களும் மீளப்பெறப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏழு பேரும் கலந்தாலோசித்த பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என மாகாண அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த சட்டமூலம் ஏற்கனவே அமைச்சரவையில் நிறைவேற்றபட்டதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் தொடர்பில் மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின் போது ஆற்றிய உரையின் முழு விபரம்,

திவிநெகும சட்டமூலத்திற்கு அங்கீகாரத்தை வழங்குவது குறித்து இந்த சபை இப்போது விவாதித்துக் கொண்டிருக்கிறது. முக்கியமான ஒரு சட்டமூலமான இதனை நாடாளுமன்றத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ சமர்ப்பித்த போது இதனை மாகாண சபைகளின் அங்கீகாரத்திற்கு வழங்கிப் பெற்று மீள சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்தே இங்கு இப்போது நாம் அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த சட்டமூலம் ஏதோ அவசரமாக சமர்ப்பிக்கப்பட்டது போன்று ஒரு மாயத்தோற்றம் வெளியில் உள்ளது. அதுவல்ல உண்மை என்பதை நான் ஆதாரத்துடன் கூற விரும்புகிறேன்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி முதலாவது திவிநெகும உத்தேச சட்டமூலத்திற்கான பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பத்திரத்திற்கான முதல் அமைச்சரவை அனுமதி கடந்த வருடம் செப்டெம்பர் எட்டாம் திகதி வழங்கப்பட்டது. 

இரண்டாவது திவிநெகும உத்தேச சட்டமூல பத்திரம் இந்த வருடம் ஜீலை 24ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. அதற்கு மறுநாள் இவற்றை அமைச்சரவை உப குழு ஆராய்ந்தது. இதனையடுத்து 'திவிநெகும' இரண்டாவது உத்தேச சட்டமூல பத்திரத்திற்கு ஜீலை 26ஆம் திகதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. பின்னர் கடந்த ஜீலை 30ஆம் திகதி இந்த அமைச்சரவை அனுமதி வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

இதற்கடுத்தபடியாக 'திவிநெகும' சட்டமூலம் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசனை குழுவிடம் ஜீலை 31ஆம் திகதி முன்வைக்கப்பட்டது. இந்தப் பின்னணியின் கீழ் தான் ஆகஸ்ட் 10ஆம் திகதி இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

கடந்த மாதம் 18ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியபோது இந்த சட்டமூலம் தொடர்பான தனது அபிப்பிராயத்தை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. உயர் நீதிமன்றத்தின் கூற்றுக்கமைய மறுநாள் மாகாண சபைகளின் அங்கீகாரத்திற்காக இது அனுப்பப்பட்டது.

எதிர்க்கட்சியினர் கூறுவது போல இது வெறுமனே அவசர அவசரமாக எடுக்கப்பட்ட ஒரு  செயற்திட்டம் என்று நாம் எடுத்த எடுப்பிலேயே கூறிவிடமுடியாது. இந்த 'திவிநெகும' சட்டமூலத்தின் உள்ள சாதக பாதகங்களை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

என்னைப் பொறுத்தவரை நான் இந்த 'திவிநெகும' உத்தேச செயற்றிட்டத்தை ஆராய்ந்து பார்த்தபோது  அதில் பாரதூரமான தவறுகளோ, விளைவுகளோ இருப்பதாக கருதமுடியவில்லை.எல்லாமே ஒரு திணைக்களத்தின் கீழ் வருவதற்கான ஏற்பாடுகள் இதில் உள்ளன. இதன்படி இதிலுள்ள ஊழியர்கள் திணைக்களத்தின் கீழுள்ள அரச ஊழியர்களாகவே இருப்பர். ஆதிகார சபை ஒன்று இருக்குமாயின் அதில் அமைச்சர் ஒருவரின்  ஊழியர்களே இருப்பர்.

திணைக்களம் என்று வரும் போது அதிலுள்ளவர்கள் அரச சேவைகள் ஆணைக்குழுவின் ஊழியர்களாகவே இருப்பார். அவர்கள் சுயாதீனமானவர்கள். இந்த 'திவிநெகும'வை கட்டுப்படுத்தும் திணைக்களம் நேரடியாக கணக்காய்வாளர் நாயக திணைக்களத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

இப்போதுள்ள அதிகார சபைகளை பாருங்கள் அப்படி இல்லை இந்த 'திவிநெகும' அமுலுக்கு வந்தால் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பினால் கூட கணக்குக் காட்ட வேண்டிய ஒரு நிலை உள்ளது. உண்மையில் இது ஒரு நல்ல அம்சம் நிதிக் கட்டுப்பாடு இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

சனசமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்டமைப்பை இது கொண்டுள்ளதையும் நாம் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஊர்களில் இருக்கும் சமூக அமைப்புக்களை வலுப்படுத்த வேண்டும். 'திவிநெகும' தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தனைமானி அறிவித்தலின் இரண்டாம் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நான் பார்த்த போது சமுதாய அடிப்படையிலான ஒழுங்கமைப்புக்கள் இந்த காலத்திற்கேற்ப தேவையென்பதை உணரமுடிகின்றது.

போரினால் கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் இன்னமும் குறைந்தளவு வருமானத்தில் வாழும் மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை சீராக்கி, வாழ்வாதார வாய்ப்புக்களை மேம்படுத்த இந்த 'திவிநெகும' உதவுமானால் அதற்கு நாம் உரிய அங்கீகாரத்தை வழங்குவதா இல்லையா என்பதை எமது மாகாண சபை உறுப்பினர்கள்  சொல்ல வேண்டும்.

தேர்தல் காலங்களில் நாம் பலதும் பத்தும் பேசியிருப்போம். எப்படியோ தேர்தலில் வென்ற பிறகு நாம் அனைவரும் மக்களுக்கு சேவையாற்ற திடசங்பற்பம் பூண்டுள்ளோம். இந்த எனது கருத்தில் இங்குள்ள அனைவரும் உடன்படுவார்கள் என்று நம்புகிறேன்.

அடுத்ததாக திவிநெகும சமுதாய அடிப்படையிலான பிராந்திய ரீதியிலான வங்கிகள் குறித்து 'திவிநெகும' வர்த்தமானி பத்திரத்தின் ஏழாம் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நான் ஆராய்ந்து பார்த்த போது 'திவிநெகும' பயனாளிகளிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல், அவர்களுக்கு கடன் வசதிகளை வழங்குதல், பயன்தாரிகளுக்கு வருமானத்தை அதிகரித்தல் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கிழக்கில் இன்னமும் எத்தனையோ இடங்கள், பிரதேசங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. அவற்றை மேம்படுத்தி முன்னோக்கிக் கொண்டுசெல்ல இந்தத் திட்டங்கள் உதவுமென நம்புகிறேன். சமூர்த்தி வங்கிகள் இப்போது இருக்கின்றன. ஆனால் அவை முகாமைத்துவத்துக்கு சரியாக உட்படுத்தப்படுகின்றனவா? அவை யாருக்கு பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளன? இந்தக் கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை.

ஆனால் வங்கிகள் விடயத்தில் 'திவிநெகும' வின்படி அதற்கான முகாமைச்சபையில் நிதியமைச்சரின் பிரதிநிதி, மத்திய வங்கியின் பிரதிநிதி சம்பந்தப்பட்ட அமைச்சின்  செயலாளரது  பிரதிநிதி என்பவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

உண்மையில் இது வரவேற்கப்பட கூடியதே. ஏனெனில் இந்த முகாமைச் சபையானது 'திவிநெகும'வின் கீழ் வரும் வங்கிகளினதும், வங்கித் தொழிற்சங்கங்களினதும் நிதி சார்ந்த செயற்பாடுகளை மேற்பார்வை செய்து ஒழுங்குப்படுத்தி காலத்துக்குக் காலம் உரிய  பணிப்புரைகளை வழங்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஏற்பாடுகள் வரவேற்கப்படக் கூடியவை தான்.


'திவிநெகும' ஒரு திணைக்களத்தின் கீழ் என்று வந்தால் அது நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும். இதில் ஏதேனும் தவறுகள் வந்தால் அது நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படலாம். எப்படியோ மக்கள் மன்றங்களை மீறி எதுவும் நடக்கா தென்பது எமது அனைவருக்கும் தெரியும்.

எனது கணிப்பின்படி இந்த 'திவிநெகும' செயற்திட்டம் கிராமிய மக்கள் தமது சொந்தக் கால்களில் எழுந்து நிற்பதற்கான  நம்பிக்கையை யதார்த்தமாக கொடுக்குமென நம்புகிறேன். மத்திய அரசின் ஒத்துழைப்பு இருப்பதால் இந்த செயற்திட்டம் சாத்தியமானதென்றே கருதுகிறேன்.

கிராமிய மட்டத்தில் சிறுகைத்தொழில் செய்வோர் இப்போது அவசரத் தேவைகளுக்காக பணம் கடனாக பெறுகின்றனர். தனிப்பட்ட நபர்களின் மூலம் இந்தக் கடன் பெறுவதால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கும் காலங்களுமுண்டு.

'திவிநெகும' வங்கி முறை வந்தால் அவர்கள் பணத்தை இலகுவில் பெற்று திருப்பிச் செலுத்த முடியும். உதாரணமாக சிறு வியாபாரம் ஒன்றுக்காக அவசர முற்பணம் செலுத்த வேண்டிய ஒரு தேவை வரும் போது இந்த இலகு கடனை, எதுவித  இழுத்தடிப்புக்கள் இன்றி, கடும் நிபந்தனைகள் அற்று பெறமுடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில் இவ்வாறான செயற்பாடுகள் வரவேற்கப்பட வேண்டுமென்பது தான் எமது கருத்து. 'திவிநெகும' வந்தால் எல்லாமே தலைகீழாக மாற்றப்பட்டுவிடும், முன்னர் இருந்த அதிகார சபைகள் முழுமையாக ஒரங்கட்டப்பட்டுவிடும் என கூறப்படும் விடயங்களில் நான் உடன்பட விரும்பவில்லை.

ஏனெனில் 'திவிநெகும' வர்த்தமானியின் பத்தாம் பாகத்தின் 44ஆம் இலக்க விதந்துரைகளை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானதாக இருக்கும் என கருதுகிறேன்.

சமுர்த்தி அதிகார சபை, இலங்கை மலைநாட்டு அதாவது உடரட்ட அபிவிருத்தி சபை, தெற்கு அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றிலும், அதன் கீழ் நிறுவப்பட்ட நிதியங்களும் எந்த நோக்கில் நிறுவப்பட்டனவோ அந்த நோக்கங்கள் மற்றும் பயனாளிகள் விடயத்தில் மாற்றங்கள் எதுவும் இருக்கமாட்டாதென உறுதிப்படுத்தி திணைக்களம் அதனை முகாமை செய்யவேண்டுமென அந்த விதந்துரை கூறுகின்றது.

இப்படியான ஒரு பின்னணியில் பார்க்கும்போது 'திவிநெகும' செயற்திட்டம் அமுலுக்கு வந்தால் இப்போதுள்ளவற்றை விட சிறந்த முகாமைத்துவம்  ஏற்படலாமென்பதை  காண முடிகிறது.

இவற்றை ஆராய்ந்தபோது நான் அவதானித்த விடயம் என்னவெனில் இப்போது இந்தத் துறையுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் இதில் தலையிடும் நிலைமை இருக்கிறது. 'திவிநெகும' சட்டமூலம் ஒன்று வந்தால் அந்த விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர் கூட எதேச்சதிகாரமாக அதில் செயற்பட முடியாதென்பது தெரிகிறது. இந்த விடயம் குறித்து நான் கடந்த ஒரு வாரமாகவே தீவிரமாக ஆராய்ந்தேன்.

கிழக்கு மாகாண சபையினூடாக தற்போது மேற்கொள்ளப்படும் எந்த செயற்திட்டங்களுக்கும் இந்த 'திவிநெகும' சட்டமூலம் பாதிப்பை ஏற்படுத்துவதாக  தெரியவில்லை.

மாகாண சபைகளில் இந்த சட்டமூலத்திற்கு அங்கீகாரம் பெறப்பட வேண்டுமென்று உயர் நீதிமன்றம் கூறியது தப்பாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. மத்திய அரசுக்கும், மாகாண அரசுக்கும் பொதுவான விடயங்களே இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் கூறியிருப்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முhகாண சபையில் இருந்து இந்த சட்டமூலத்தின் படி, அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக கூறும் இந்த சபையின் உறுப்பினர்கள் எவராவது அது என்ன, எப்படி என்பதை ஆதாரங்களோடு விளங்கப்படுத்தினால் சிறந்ததாக இருக்கும். இந்த சட்டமூலம் மத்திய அரசினால் நிவேற்றப்பட்டால் இப்படி நடக்கலாம், அப்படி நடக்கலாமென நாங்கள் வெறுமனே யூகங்களுக்கு இடங்கொடுத்து செயற்படுவது அர்த்தமற்றதென்றே நான் கருதுகிறேன்.

ஏனெனில் எல்லாம் விடயங்களிலும் நாங்கள் தொடர்ந்து சந்தேகப்பட்டுக் கொண்டு அரசியல் நடத்தினாலும் மக்களுக்கான எமது சேவைகளை செய்ய முடியாது. நான் செய்த ஆய்வுகளின் படி சமுர்த்தி உட்பட்ட இதர விடயங்கள் ஒரு முகாமைத்துவம் செய்வதற்கான வழியையே இந்த 'திவிநெகும' சட்டமூலம் திறந்துவிடுகிறது.

மாகாண சபைகளின் உதவியின்றி மத்திய அரசால் நேரடியாகவே மாகாண மக்களை சென்றடைய முடியுமா என்பதை நீங்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். மாகாணசபைகளின் விடயதானங்களை பறித்துவிட முடியாதென 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் இங்கு நான் எமது சக உறுப்பினர்களுக்கு குறிப்பிட்டு வைக்க விரும்புகிறேன்.

மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கும் ஒரு சட்டமூலமாக இருந்தால் இதனை ஏற்கனவே அமைச்சரவை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கீகரித்திருக்குமா என்பது தான் எனது கேள்வியாக இருக்கிறது.

நாங்கள் எடுத்தற்கெல்லாம் எதிர்ப்பு அரசியல் செய்ய முற்படுவது எமது தமிழ் பேசும் சமூகங்களை பாதிக்கும் என்பது தான் கருத்து. மத்திய அரசுக்கு ஆதரவளிக்கிறோம் என்பதற்காக நாங்கள் அவர்கள் கொண்டுவரும் வேலைத்திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து விட முடியாது.

நாங்கள் இவற்றை ஆராய்ந்து எமது விமர்சனங்களை சொல்வோம். கடந்த மாகாண சபையில் இங்கு நாடு நகர அபிவிருத்தி தெடர்பான சட்டமூலம் விவாதத்திற்கு வந்தபோது அதிலுள்ள குறைகளை எமது கட்சி சுட்டிக்காட்டியது.

மக்களுக்கு பாதிப்பு அல்லது  மாகாண சபையின் அதிகாரங்களுக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் நாங்கள் இவற்றை எதிர்ப்பதில் தப்பில்லை. ஆனால் மக்களுக்கு நன்மைகளை வழங்கும் மாகாண அதிகாரங்களை கேள்விக்குட்படுத்தாத ஒரு யோசனைத் திட்டத்திற்கு நாங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.

இந்த மாகாணசபைத் தேர்தலில் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் எமது மக்கள் எம்மைத் தெரிவு செய்து அனுப்பியுள்ளனர். நாங்கள் மத்திய ஆட்சியாளர்களுடன் இல்லாத விடயங்களுக்காக சண்டை பிடிப்பதன் மூலம் பாதிக்கப்பட போவது எமது மாகாண மக்கள் தான்.

வடக்கைப் போல் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் இன்னமும் இருக்கின்றன. மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துதல், அவர்களுக்கான  சுயதொழில், உல்லாசப்பயணத்துறையை ஊக்குவித்து தொழில்வாய்ப்புக்கான ஏற்படுத்திக் கொடுத்தல் என்று பலதரப்பட்ட வேலைகளை நாம் செய்யவேண்டியுள்ளது" என்றார்.   

  Comments - 0

  • meenavan Wednesday, 03 October 2012 01:06 AM

    சிறுபான்மை இனத்திற்கு பாதிப்பில்லை எனின் ஆரம்பத்தில் ஏன் கால அவகாசம் கோரினீர்கள்? உயர் நீதி மன்றம் ஏன் சட்ட அமுலாகத்திட்க்கு மாகாணசபை அனுமதி வேண்டுமென தீர்ப்பு வழங்கியது? குட்டி ஆடுகள் குடலேற கொழுத்தாலும் வழுக்கள் தான்..... அதனை நிருபித்து விட்டீர்கள்.

    Reply : 0       0

    meenavan Wednesday, 03 October 2012 03:14 AM

    சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லை என்பதைவிட உங்களது பக்கட்டுகள் நிறையும் என்றால் பொருத்தம்,முஸ்லிம் சமுகத்தை காவு கொடுக்கும் முண்ணான் அற்று மூக்கறு நிலைக்கு முகமன் கூறும் முட்டாள் காங்கிரசின் முதன்மையானவர்கள் .....? வெட்கம் அவமானம் தலை குனிவு.....

    Reply : 0       0

    kuhan Wednesday, 03 October 2012 04:54 AM

    மாகாண சபைகளின் உதவியின்றி மத்திய அரசால் நேரடியாகவே மாகாண மக்களை சென்றடைய முடியுமா என்பதை நீங்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்..? மாகாணசபைகளின் விடயதானங்களை பறித்துவிட முடியாதென 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் இங்கு நான் எமது சக உறுப்பினர்களுக்கு குறிப்பிட்டு வைக்க விரும்புகிறேன்..?

    உங்கள் பேச்சு தெளிவில்லை

    மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கும் ஒரு சட்டமூலமாக இருந்தால் இதனை ஏற்கனவே அமைச்சரவை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கீகரித்திருக்குமா என்பது தான் எனது கேள்வியாக இருக்கிறது. நாங்கள் இவற்றை ஆராய்ந்து எமது விமர்சனங்களை சொல்வோம்.

    கடந்த மாகாண சபையில் இங்கு நாடு நகர அபிவிருத்தி தெடர்பான சட்டமூலம் விவாதத்திற்கு வந்தபோது அதிலுள்ள குறைகளை எமது கட்சி சுட்டிக்காட்டியது. இது குறைகள் அற்ற சட்டமா?

    Reply : 0       0

    Reesath Wednesday, 03 October 2012 05:22 AM

    எங்கள் கல்முனையின் தைரியம் யாருக்கும் இல்லை. அங்கு சிலர் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டனர்... அதன் விளைவுதான் இதெல்லாம்

    Reply : 0       0

    Haniff Wednesday, 03 October 2012 05:29 AM

    அப்படி என்றால் சென்றமுறை அதனை ஏன் எதிர்த்தீர்கள்? நல்லா இருக்குது உங்க‌ நியாயம்...

    Reply : 0       0

    Nallavan Wednesday, 03 October 2012 06:26 AM

    சுய நலனுக்காக தன்இனத்தை விற்கின்ற உங்களை போன்றவர்கள் கூறுவதை இனியும் முஸ்லிம் சமூகம் நம்ப போவதில்லை. மக்களின் கருத்துக்கு மதிப்பு அளிக்கவில்லை. இதன் விளைவு அடுத்த தேர்தலில் புரியும்...

    Reply : 0       0

    Rizadh Wednesday, 03 October 2012 07:57 AM

    முஸ்லிம் காங்கிரஸையும் முஸ்லிம்களின் வாக்குகளையும் எவருக்கோ விற்றுவிட்டார் ஹக்கீம்....

    திவிநெகும சட்டமூல நிறைவேற்றம் தொடர்பாக முன்னுக்கு பின் முரணான முடிவுகளை வெளிக்காட்டியுள்ள நிலையிலையே முஸ்லிம் காங்கிரஸின் கபட நாடகம் முஸ்லிம்களுக்கு அம்பலமாகி உள்ளது...

    Reply : 0       0

    rima Wednesday, 03 October 2012 08:27 AM

    இது உங்களுக்கு பிரச்சினை இல்லை... இது எங்கள் சமூகத்துக்குதான் பிரச்சினை...

    Reply : 0       0

    rima Wednesday, 03 October 2012 08:38 AM

    இவர்களின் கட்சிக்கார ஆக்காளுக்கு இரண்டு பொய் நாக்கு...

    Reply : 0       0

    Kuruvi Wednesday, 03 October 2012 06:56 PM

    மாகாண சபை ஏன் வேன்டும், அதிகார பரவலாக்கம் என்றால் என்ன? போன்ற விடயங்களை நல்ல ஓர் அறிவு சார்ந்தவரிடம் சென்று கற்றுக்கொண்டு பேசுங்கள் சார்... இந்த சட்டதிற்கும் சிறுபான்மை மக்களுக்கும் சம்பந்தமே இல்லை சார்... இது ஓர் அதிகாரம் சம்பந்தபட்ட விடயம் சார்... இறைவா கிழக்கு மாகாண மக்களை நீயே காப்பாற்றுவாயாக..!

    Reply : 0       0

    farzan.AR Friday, 05 October 2012 08:12 AM

    ஹாபிஸே கூறுகிறார், பல திணைக்களங்கள் ஒரு அமைச்சரின் கீழ் வருகின்றது என்று. இருக்கிற பிரச்சினையில் முதன்மையானதே இதுதான் ஜனாப். ஹாபீஸ் அவர்களே. பகிரப்பட்ட பல அதிகாரங்களை மீளவும் உள்ளீர்த்து ஒன்றாக்கி ஏப்பம்விட நீங்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளீர்கள். எதைப் பற்றியும் உங்களிடம் கேள்விகளை எழுப்பினால் சிறுபான்மை என்ற பசப்பு வார்த்தையைக் கூறி நமது மக்களை அடக்கிவிட முயற்சிக்கும் அறியாமையை அல்லாஹ் நீண்ட நாளைக்குப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான்.

    விவாதிப்பதற்கு முன் முகாவின் உறுப்பினர்கள் வழங்கிய தீர்ப்பு கட்சியில் இருக்கும் கொஞ்ச நம்பிக்கைகையும் அழித்துவிட்டது. பிறகென்ன உங்களைப் போன்ற வியாபாரிகளின் கூடாரமாக நமது கட்சி மாறினால் இன்னும் என்னவென்ன வியாபாரம் நடக்குமோ...

    Reply : 0       0

    faris Friday, 05 October 2012 09:15 AM

    I calculated that Hafiz Naseer young men and the world and brilliant in Medalln science and precision and intelligence.But now I knew he was ignorant and stupid and pocket bored billions Mahinda Rajabakesha.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .