2026 மே 04, திங்கட்கிழமை

எந்த மொழியை பேசினாலும் ஒற்றுமையாக பணியாற்றுவதற்கு தடையல்ல: அமெரிக்க தூதுவர்

Super User   / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


சிங்களமோ தமிழோ எந்த மொழியை பேசினாலும் அபிவிருத்திகளில் கூட்டாக இணைந்து ஒத்துழைப்பதற்கு தடையாக இருக்கப் போவதில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் தெரிவித்தார்.

யுத்தத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம் மற்றும்  சிங்கள எல்லைக் கிராமமான பெரிய புல்லுமலைக்கு அமெரிக்க தூதுவர் நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்தார்.இதன்போது, யூ.எஸ்.எயிட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட சந்தைப் பொருளாதார மையத்தையும் பஸ் நிலையத்தையும் திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமெரிக்க தூதுவர்,

"இந்த பிரசேத்திற்கு இன்று மிக முக்கியமானதும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க நாளாகும். 1970, 1980 ஆம் ஆண்டுகளில் இந்த நகரம் சமூக வர்த்தகர்களும் சஞ்சாரிகளும் வருகை தரும் ஒரு சுறுசுறுப்பான வெற்றிகரமான சந்தைப் பகுதியாக இருந்தது என்றும் அதேவேளை யுத்தம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது என்றும் கேள்விப்பட்டேன்

இங்கு வாழ்ந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து தூரச் சென்றதன் பின்னர் மீண்டும் வந்து தமது பொருளாதார, வியாபார நடவடிக்கைகளை தொடங்குவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பழைய நிலைமையை மீளக்கொண்டு வருவதற்கு உங்களுக்கு நாம் உதவியுள்ளோம்.

உங்களோடு  சேர்ந்து பணியாற்றக் கிடைத்ததையிட்டு நாம் பெருமையடைகின்றோம். கடந்த சில வருடங்களில் அமெரிக்காவின் யூ.எஸ்.எயிட் நிறுவனம் பெரிய புல்லுமலையில் 10 செயற் திட்டங்களை அமுலாக்கியிருக்கின்றது. இந்தப் பகுதியின் சமூக வளச்சிக்காக 750 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனது கடந்த விஜயத்தின்போது மங்களகம கிராமத்திலுள்ள வீதியை  திறந்து ஏ - 5 வீதிக்கு நடந்து வந்தது எனக்கு ஞாபகமிருக்கின்றது.

அது கூட யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் உதவியினால் மக்கள் ஆதரவுடன் நிர்மாணிக்ப்பட்டது தான். இந்த இடத்திலே ஐக்கியப்பட்ட சமூகமாக  வந்து வர்த்தகம் செய்வதற்கு ஒரு பொதுவான வர்த்தக மையம் தேவை என்று நீங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தீர்கள். அது இன்று நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இவையெல்லாம் சமூகங்களை மீள இணைக்கின்ற செயற் திட்டங்கள்தான்.

இந்தப் பகுதியைச் சூழ்ந்து வசிக்கின்ற சமூகத்தவர்கள் உங்களுக்கு ஒரு பொதுப்போக்கு வரத்து பஸ் நிலையம் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தீர்கள். அதுவும் இப்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் இலகுவாகப் பயணிக்க முடியும்.

பெரிய புல்லுமலையின் சரித்திரம் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்ப வழிசமைக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் சமூகங்களை இணைக்கும் ஒரு புதிய சரித்திரத்தைப் படைக்கும். புல்லுமலைக்கு பிரகாசமான எதிர்காலமும் புகழும் உண்டு.
நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களுக்கும் நீங்கள் ஒற்றுமையின் வரைவிலக்கணமான ஒரு பாடத்தைப் புகட்டியிருக்கின்றீர்கள். அத்தோடு நீங்கள் பெருமைக்குரியவர்களாகவும் திகழ்கின்றீர்கள்.

ஐக்கியப்பட்ட மக்களாக இருந்து சாதித்துக் காட்டியதனால் நீங்கள் புகழப்பட வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். அத்துடன் உங்களைப் பங்காளர்களாக இணைத்துக் கொண்டு பணியாற்றியதில் எங்களுக்குப் பெருமையாகவும் இருக்கின்றது" என்றார்.

  Comments - 0

  • vallarasu Tuesday, 30 April 2013 09:50 AM

    மேடம், இது எங்களுக்குப் புரிகிறது. ஆனால் இந்த புரிய வேண்டியவர்களுக்கு புரியவில்லை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .