.JPG)
-தேவ அதிரன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகாகண்டி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு யானை தாக்கியதில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இருப்பினும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் செல்வா தெரிவித்தார்.
தொடர்ச்சியாக யானைத் தொல்லையை எதிர்கொண்டுவரும் தமது கிராமத்தில் இந்த வருடத்தில் மாத்திரம் 8 வீடுகள் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், 50 இற்கும் மேற்பட்ட நெல் மூடைகள், சோளம், அரிசி என பல உணவுப் பொருள்களையும் யானைகள் நாசமாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யானை வேலிகள் அமைக்கப்பட்டாலும், அவை சரியான முறையில் பராமரிக்கப்படாமையினால் அவற்றினை உடைத்து யானைகள் உள்ளே வரத்தொடங்கி பல மாதங்களாக வெலிக்காகண்டி கிராமத்தினுள் நுழைந்து அட்டகாசம் செய்வதாகவும், மீள்குடியேற்றப்பட்ட தமக்கு வீடுகள், மின்சார வசதிகள், நீரப்பாசன வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்றும் கூறி மாவட்ட செலயகத்தின் முன்னால் வெலிக்காகண்டி மக்கள் போராட்டம் ஒன்றினை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
