2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வடமாகாண தீர்மானத்தை த.தே.கூ. வரவேற்கின்றது: அரியநேத்திரன்

Gavitha   / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

வடமாகாண சபையிலே இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றிருக்கின்றது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 6,550 வாக்குகள் மேலும் அதிகமாகப் பெற்றிருந்தால் அதே தீர்மானத்தை கிழக்கிலும் நிறைவேற்றியிருக்கலாம் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மண்டூர் 14 அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி வெள்ளிக்கிழமை (13) மேற்படி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எஸ்.புஸ்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'ஒரு மாணவனின் முன்னேற்றத்துக்குமு; ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிப்பதற்கும் பாடசாலைகளிலே இணைப்பாடவிதானமாக இருக்கின்ற விளையாட்டுப் போட்டிகள் இன்றியமையாததாக அமைகின்றன.
பாடசாலை நிகழ்ச்சிகளிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் மாணவர்களை ஆற்றுப்படுத்துகின்றபோது, மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமாகத் திகழ்கின்றார்கள்.

மாணவர்களுக்கு அறம்சார்ந்த கல்வியையும் ஆன்மீகம் சார்ந்த கல்வியையும் வழங்குவோமாக இருந்தால், வாழ்க்கை எனும் கல்வியிலே மாணவர்கள் தானாகவே முன்னேறிச் செல்வார்கள்.

நாம், இருக்கின்ற வளங்களைக்கொண்டு முன்னேற்றமடைய வேண்டும்.  இதற்கு கடந்த கால போராட்ட வரலாறுகள் சான்றாக அமைகின்றன. மண்டூர் பிரதேசத்திலே அதிகளவான மாவீரர்கள் மரணித்துள்ளார்கள். அந்த வகையில் மக்களுக்களுக்காய் தியாகம் செய்த மாவீரர்களை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசம் முழுமையாக போராட்டத்தில் அர்ப்பணிப்புச் செய்த பிரதேசமாகும். ஆனாலும், 1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு பின்னரும் மாகாணசபையில் ஆட்சியாளர்களாக இல்லாமல் பார்வையாளர்களாக இருந்து வந்துள்ளோம். ஆனால் தற்போதைய நிலையில் இந்த விடயத்தில் பாரிய மாற்றம் எற்பட்டிருக்கின்றது.

தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற கிழக்கு மாகாண ஆட்சியில், நாங்கள் முஸ்லிம் காங்கிரஸூடன் ஏன் கூட்டுச் சேர்ந்து செல்கின்றோம் என்றால், மீதமாக இருக்கின்ற இரண்டரை வருட ஆட்சியில் எமது பின்தங்கிய பிரதேசங்கள், கஷ்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள், அங்கவீனமான மாவீரர்கள், மாவீர குடும்பங்கள், போன்றோருக்கு ஒருசில உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவேயாகும்.

தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும், தமிழர்களாக இருந்துவிட்டு மாற்றுக் கட்சிக்கு வாக்களிப்போமேயாக இருந்தால், அது எமது தமிழ் இனத்துக்கும் செய்யும் பாரிய துரோகமாகும். தமிழர்களாக இருந்து கொண்டு கடவுளை வேண்டி விரதமிருந்தாலும் மாற்றுக் கட்சிக்கு வாக்களித்தால் அது தமிழினத்துக்கும் செய்யும் பாரிய துரோகமாகும்.

எதிர்வரும் காலங்களில் பல மாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருக்கின்றது, எனவே இனிவரும் காலங்களில் தமிழர்கள் தமிழர்களாக வாழ வேண்டுமாக இருந்தால் எமது தமிழ் மக்கள் அனவரும் தமிழ் தேசியத்தின் பால் நிற்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்.

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் தொடர்ந்து வந்ததெல்லாம் இனப்படுகொலைதான். இதனை வடமாகாணசபை தீர்மானமாக நிறைவேற்றியிருக்கின்றது. இந்த தீர்மானம் சர்வதேசத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுதியிருக்கின்றது.

அகிச்சை ரீதியாகப் போராடி, ஆயுத ரீதியாகப் போராடி, தற்போது இராஜதந்திர ரீதியாகப் போராடி வரும் கால காட்டத்தில் வடமாகாண சபையின் தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும். இந்த நிலமை தொடர்வதற்கு தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு துணையிருக்க வேண்டும்.

கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாம் 7 தேர்தல்களைச் சந்தித்துள்ளோம். இந்த தேர்தல்களில், தமிழ் மக்கள் தொடர்ந்து எமது பக்கம் தான் இருந்து வருகின்றார்கள். இதனால் சர்வதேச ரீதியில் எமது குரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X