2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிள்களை மீள ஒப்படைப்பதை தாமதப்படுத்தவும்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் கட்டணம் செலுத்தி மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக்கொண்ட அரச வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் தமது மோட்டார் சைக்கிள்களை மீள ஒப்படைப்பதை தாமதப்படுத்துமாறு வீடமைப்பு

மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, திங்கட்கிழமை (16) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் கட்டணம் செலுத்தி மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக்கொண்ட அனைத்து அரச வெளிக்கள உத்தியோகஸ்தர்களும் தமது மோட்டார் சைக்கிள்களை மீள ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

2014ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்டத்தின் கீழ் வெளிக்களப்பணிகளில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் மோட்டார் சைக்களுக்காக ஒரே தடவையில் வழங்கப்படும் கட்டணத்தை 31.12.2014ஆம் திகதிக்குப் பின்னர் அறவிடவேண்டாமெனவும் அவ்வாறான உத்தியோகஸ்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதை நிறுத்தி வைக்குமாறும் தேசிய வரவு - செலவுத்திட்ட பொது திறைசேரிப் பணிப்பாளர் நாயகத்தால் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் மேற்படி திகதிக்குப் பின்னர் கட்டணம் செலுத்தி மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக்கொண்ட அரசாங்க வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் தமது மோட்டார் சைக்கிள்களுக்கு பணம் செலவழித்து சிறிய வேலைகள் செய்து கண்ணாடிகளை மாற்றி அந்த மோட்டார் சைக்கிள்களை தமது கடமைகளுக்குப் பயன்படுத்தி வரும் நிலையில், மோட்டார் சைக்கிள்களை ஒப்படைக்கச் சொல்வதென்பது அவர்களை சங்கடத்துக்குள்ளாக்கியுள்ளது.

இது குறித்து மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அரசாங்க வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் பலர் என்னிடம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நான் அதிகாரிகளின் கவனத்துக்கும் அரசாங்கத்தின் கவனத்துக்கும் கொண்டுவந்துள்ளேன். எனவே அரசாங்கம் மற்றும் திறைசேரி உரிய நடவடிக்கை எடுத்து ஒரு முடிவினை அறிவிக்கும் வரை மோட்டார் சைக்கிள்களை பெற்ற குறித்த அரசாங்க வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் தமது மோட்டார் சைக்கிள்களை ஒப்படைப்பதை தாமதப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X