2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'அகதி முகாம்களில் சம்பூர் மக்கள் அல்லல்படுவதை அனுமதிக்கமுடியாது'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 12 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தங்களது சொந்த இடங்களில் வாழ்ந்த சம்பூர் மக்கள் கடந்த 10 வருடகாலமாக அகதி முகாம்களில் அல்லல்படுகின்ற நிலையை இனி ஒரு நிமிடம் கூட அனுமதிக்கமுடியாது என்று  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூர் மீராகேணி மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில்; செவ்வாய்க்கிழமை (10) மாலை நடைபெற்ற வருடாந்த மெய்வல்லுநர் போட்டியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இந்த மாகாணத்தில் அகதிகளின் அவலக்குரல் இனிமேலும் ஒலிக்கக்கூடாது. தங்களது சொந்த மண்ணில்   அகதிகளாக  அவர்கள் அவஸ்தைப்படுவதை அனுமதிக்கவும் கூடாது. எனது ஆட்சிக்காலத்துக்குள் அவர்களின் துயரங்கள் துடைத்தெறியப்பட்டு, தங்களது  சொந்த இடங்களுக்கு திரும்பி கால் நீட்டித் உறக்கம் கொள்ளவேண்டும்.

சம்பூர் மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த  மத்திய அரசும் மாகாண அரசும் இப்பொழுது நடவடிக்கை எடுத்துள்ளது. வெகுவிரைவில் அவர்கள் தங்களது  இடங்களுக்கு திரும்புவார்கள். இதனுடன் அவர்களின் அகதி வாழ்க்கைக்கு முடிவு கட்டப்படும்.

தங்களது வாழ்விடம், சொத்து சுகங்கள்,  நிம்மதி எல்லாவற்றையும் இழந்து துயரத்துடன்; காலங்கழிக்கின்ற நிலை மாற்றப்படும். எனது ஆட்சியில் அவர்களின் துயரம் நீங்கி ஆனந்தக்கண்ணீரோடு  சொந்த இடங்களில் மீள்குடியமர்வதை இறைவனின்; துணையுடன் நான் செய்துமுடிப்பேன்.

அகதி வாழ்க்கை முஸ்லிம்களுக்கும் பழக்கப்பட்டுப்போன ஒன்று.  இந்த மீராகேணி உட்பட பல கிராமங்களில்; புலிகள் கோலோச்சிய காலத்தில் அகதிகளான  மக்கள் நீங்கள், அகதி வாழ்க்கையின் துயரத்தை அறிவீர்கள். இனி அதற்கு யாரும் இடமளிக்கக்கூடாது. அகதி மக்களுக்காக எனது குரல் என்றும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X