2025 மே 19, திங்கட்கிழமை

உதயசிறியின் விடுதலைக்காக ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளேன்: ஒஸ்ரின் பெர்னாண்டோ

Suganthini Ratnam   / 2015 மார்ச் 22 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன, எஸ். பாக்கியநாதன்

சிகிரியாவிலுள்ள பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும்  மட்டக்களப்பு, சித்தாண்டியைச் சேர்ந்த உதயசிறிக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவுக்கும்  மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினருக்கும்  இடையிலான சந்திப்பு மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது.

இதன்போது, சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறிக்கு,  பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம்,  மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் கேட்டுக்கொண்டனர்.

இதன்போதே கிழக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு  தொடர்ந்து  தெரிவித்த  அவர்,

'சித்தாண்டியைச் சேர்ந்த உதயசிறிக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து வேண்டுகோள் விடுக்கவுள்ளேன். இதற்காக மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பினரால் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் போன்று, எனக்கும் இந்த யுவதி தொடர்பான அனைத்து விளக்கத்தையும்  எழுதித் தந்தால், நான் அதை நேரடியாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்று ஜனாதிபதியிடம் இந்த யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு வேண்டுகோளை முன்வைப்பேன்.

மேலும், இங்கு முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 2011ஆம் ஆண்டு பட்டம் பெற்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கான  அரசாங்க நியமனங்கள் தொடர்பில் கவனத்திற்கொள்வேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேவைக்கு அதிகமாகவுள்ள மதுபானச்சாலைகளை மூடுவது தொடர்பாக கூறப்பட்டது. இது தொடர்பில்  நிதியமைச்சர் மற்றும் ஹலால் திணைக்களத்தின் கவனத்துக்கு கொண்டுவருவேன்.   மத வழிபாட்டுத்தலங்கள், பாடசாலைகளை அண்மித்துள்ள மதுபானச்சாலைகளை மூடுமாறு ஜனாதிபதி அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தார். இது தொடர்பில் மட்டக்களப்பு சிவில் சமூகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நான் ஒத்துழைப்பேன்.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு தனது நிதியிலிருந்து ஐந்து மலசலகூடங்களை அமைத்துத் தர நடவடிக்கை எடுப்பேன்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல்பீடம், சட்டபீடம் போன்றவற்றை உருவாக்குவது தொடர்பில் உயர் கல்வியமைச்சருடனான சந்திப்பை  ஏற்படுத்தித் தருகின்றேன்.

இந்த மாவட்டத்தில்  வீடற்றுள்ள  16,000 பேருக்கு வீட்டு வசதிகள்  செய்யப்படவேண்டும் என்று இங்கு கூறப்பட்டது. ஏற்கெனவே இந்திய வீட்டுத்திட்டம் இங்கு நிர்மாணிக்கப்பட்டு முடிவடைந்துள்ளன. இது தொடர்பில்  அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் கவனத்துக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு  நடவடிக்கைகளை தடுத்துநிறுத்த சிவில் சமூக அமைப்பு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதற்கு நானும்; எனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன்' எனக் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X