2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'கைப்பற்றப்பட்டுள்ள அரசாங்கக் காணிகள் ஒப்படைக்கப்படவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அடாத்தாக அல்லது ஆட்சி உறுதி மூலம் கைப்பற்றப்பட்டிருக்கின்ற அரசாங்கக் காணிகள் மீளவும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று  மட்டக்களப்பு  மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்தார்.

முஸ்லிம் எய்ட் நிறுவன ஸ்ரீலங்கா கள அலுவலகத்தின் சுமார் 15 இலட்சம் ரூபாய் நிதி அனுசரணையுடன்  நிர்மாணிக்கப்பட்ட ஏறாவூர் ஐயன்கேணி மஸ்ஜிதுஸ் ஸலாம் பாலர் பாடசாலை திறப்பு விழா நேற்று  செவ்வாய்க்கிழமை (21)  மாலை  நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'அரசாங்கக் காணிகளை கையகப்படுத்தி ஆட்சி உறுதி முடித்துவைத்திருந்தாலும், தனிநபர்களுக்கு அது ஒருபோதும் உரித்துடையதாகப்போவதில்லை. எந்தவொரு காலகட்டத்திலும் அது அரசாங்கத்துக்குரிய உடைமையாகவே கருதப்படும்.
இத்தகைய காணிகளை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களும் கிராம அபிவிருத்திச் சங்கம் போன்ற பொதுத்தொண்டு அமைப்புக்களும் பிரதேச செயலாளருக்கு உதவ வேண்டும். அப்படிப்பட்ட காணிகளை இந்தப் பிரதேச பொதுத்தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சிறுவர்கள் தங்களது இளம் பராயக் கல்வியை கற்பதற்கு தகுந்த இடவசதிகளுடன் அமைந்த மனோரம்யமான சூழல் மிக அவசியமானது.

இந்தப் பிரதேசத்தில் இடப்பற்றாக்குறை இருப்பதை என்னால் நேரில் அறிந்துகொள்ள முடிகின்றது. இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற அரச காணிகளை பல்வேறு பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அரச காணிகளையும் அடாத்தாக தனியார் கையகப்படுத்தியிருக்கின்ற காணிகளையும் அடையாளம் கண்டு பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வதற்கு பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்குப் பொதுமக்கள் உதவ வேண்டும்' என்றார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பணிப்பாளர் எம்.ஐ. சேகு அலி, முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா கள அலுவலகத்தின் தலைமை நிகழ்சித் திட்ட அதிகாரி பாஹிம் வாஹித், சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட அதிகாரி முனீர் முஸ்தபா, மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எம். அஸ்மி உட்பட பொதுமக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X