2025 மே 19, திங்கட்கிழமை

தேர்தல் பிரசாரங்களில் கெடுபிடி தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு தண்டனைகள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பிரதான நெடுஞ்சாலைகள் உட்பட எந்தத் தெருக்களிலும் போக்குவரத்தைத் தடைசெய்யும் வகையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முடியாது. புதிய தேர்தல் சட்டத்தை மீறுவோர் அதற்கான தண்டனையை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்” என, ஏறாவூர் பொலிஸ் பிரிவின் தேர்தலுக்குப் பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.எம். பியசேன தெரிவித்தார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சிமன்றங்களுக்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு புதிய தேர்தல் சட்டவிதிமுறைகளைப் பற்றித் தெளிவுபடுத்தும் சந்திப்பு, ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் நேற்று  மாலை( 23) இடம்பெற்றபோது, அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் மத்தியில் சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதன் அவசியம் பற்றி தொடர்ந்து வலியுறுத்திய அவர்,

“தெருக்களில் யாராவது தேர்தல் பிரசார நோக்கத்துக்காக கிறுக்கியிருந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

“கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் குறித்த வட்டாரத்தில் ஒரு அலுவலகத்தை அமைக்க முடியும். பிரதான ஒரு அலுவலகத்தையும் திறக்க முடியும். குறிப்பிட்ட அலுவலகத்தில் மாத்திரம்தான் போஸ்டர்களைக் காட்சிக்கு வைக்கவும், கொடிகளைப் பறக்க விடவும் முடியும்.

“காரியாலயங்கள், உரிய தேர்தல் சட்டதிட்டங்களின்படி பதிவு செய்யப்படுதல் வேண்டும்.

“தேர்தல் அலுவலகத்துக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்து, கிராம சேவகரிடம் சமர்ப்பித்து, அவரது அறிக்கையுடன் பொலிஸ் பொறுப்பதிகாரிக்குச் சமர்ப்பித்து அதனை மீண்டும் தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைத்து உரிய உறுதிப்படுத்தல் பத்திரத்தைப் பெற்றதன் பின்னர்தான் காரியாலயம் அமைக்க அனுமதி தரப்படும்.

“திறக்கப்பட்டுள்ள தேர்தல் காரியாலயங்கள் எந்நேரமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அவை பதிவு செய்யப்படவில்லை எனக் கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

“பலாத்காரமாக மதில்களில் போஸ்டர்ஸ் ஒட்டுவது  பல குற்றங்களின் கீழ் தண்டனைக்குரிய விடயமாகும்.

“எந்த வகையிலும் வாகனங்களில் ஒலிபெருக்கிகளைக் கட்டிக் கொண்டு வீதி வீதியாகத் திரிந்து பிரசாரம் செய்தல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

“சிறிய மற்றும் பெரிய ஒலிபெருக்கிகளினுடைய உரிமையாளர்களின் அனுமதி,  பாவிக்கப் போகும் அமைவிட உரிமையாளரின் அனுமதி,  குறிப்பிட்ட ஒலிபெருக்கிகளில் பேசுபவர்களின் பெயர்ப்பட்டியல் என்பவையும் முன் கூட்டியே சமர்ப்பிக்கப்பட்டு அனுமதிகள் பெறப்பட்டிருக்க வேண்டும்.

“மக்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் பிரச்சார அமைவிடங்கள் தடை செய்யப்படும்.

“பொலிஸாரையும் பொதுமக்களையும் குழப்பத்திலும் சிக்கலிலும் ஆழ்த்தும் எந்வொரு செயற்பாட்டுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X