2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பயணம் செய்வோரிடத்தில் நிதி அறவீடு

Freelancer   / 2023 ஏப்ரல் 15 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி       

மட்டக்களப்பு - படுவாங்கரைக்கும் எழுவாங்கரைப் பகுதியையும் ஊடறுத்துச் செல்வதே இலங்கையின்   இரண்டாவது மிக நீளமான வாவியாகக் கருதப்படும் மட்டக்களப்பு வாவியாகும். 

இவ்வாவியைக் கடந்தே இருபகுதிக்குமான போக்குவரத்து மார்க்கங்கள் இடம்பெற்று வருகின்றன. 

இதில் பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாகக் கருதப்படுவது குருமண்வெளி - மண்டூர் படகுப்பாதைப் போக்குவரத்தாகும்.

இதுவரைகாலமும் எதுவித கொடுப்பனவுகளையும் செலுத்தாமலேயே அப்பாதையினூடாக பிரயாணிகள் தமது போக்குவரத்துக்களை மேற்கொண்டு வந்துள்ளனர். 

எனினும் கடந்த 01.04.2023 அன்றிலிருந்து இப்படகுப்பாதையில் போக்குவரத்துச் செய்யும் பயணிகளிடம் கட்டணம் அறவிடப்படும் என கட்டண விபரங்கள் அடங்கிய பாதாகை ஒன்று வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் எந்திரி.ஏ.எம்.றிஸ்வியால் விளம்பரம் இடப்பட்டிருந்தது. 

அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததை அடுத்து. கடந்த முதலாம் திகதி நிதி வசூலிப்பது நிறுத்தப்பட்டிருந்தது.

இது இவ்வாறு இருக்க இன்று(15.04.2023) அப்படகுப் பாதையில் பயணம் செய்யும் பயணிகளிடம் நிதி அறவீடு செய்யப்படுவதாக குறித்த பதாகையில் திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, நிதி வசூலிப்பதற்குரிய பற்றுச் சீட்டுக்களுடன் பொறியியலாளர்கள், மற்றும், நிதி அறவீடு செய்யும் உத்தியோகஸ்த்தர்களும் திடீரென வருகை தந்து படகுப்பாதையில் நிதி அறவீடு செய்த பின்னர் பாதையில் பயணம் செய்வதற்கு அனுமதித்தனர்.

இதற்கு அப்பகுதி மக்கள் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால் குறித்த போக்குவரத்து மார்க்கத்தில் ஈடுபடும் 2 படகுகளும், முற்பகல் 11.30 மணிவரையில் வேவையில் ஈடுபடவில்லை. 

தாம் இதுவரையில் எதுவித கட்டணங்களும் செலுத்தாமலேயேதான தமது போக்குவரத்துக்களை இதில் மேற்கொண்டு வந்ததாகவும், இன்றிலிருந்து நிதி அறவீடு செய்யும் நடைமுறையை வீதி அபிவிருத்தி திணைக்களம் கைவிட வேண்டும் எனவும், இதற்கு தாம் எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் பயணிகளும், பொதுமக்களும் கருத்துத் தெரிவித்தனர்.

எனினும் தமக்கு மேலிடத்திலிருந்து வந்த உத்தரவின் பெயரிலேயே நிதி அறவீடு செய்வதாக அவ்விடத்திலிருந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளர் ஒருவரும், நிதி வசூலிப்பில் ஈடுபட்ட உத்தியோகஸ்த்தர்களும், தெரிவித்தனர். 

பின்னர் அவ்விடத்திற்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரயாணிகளுடனும், பொதுமக்களுடனும்  அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார். 

பொதுமக்களுக்கு அமைதியான முறையில் தமது உரிமைகளைக் கேட்பதற்கு உரிமையுள்ளது. ஆனால் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களைத் தடுப்பதற்கு யாருக்கும் அனுமதியில்லை, நிதி அறவீடு செய்வதை தடை செய்ய வேண்டுமாக இருந்தால் உரிய அதிகாரிகளுக்கு மக்கள் எழுத்து மூலமாக விண்ணப்பங்களை வழங்க முடியும். 

எனவே மக்கள் குறித்த பாதையில் போக்குவரத்துச் செய்வதக்கு யாரும் தடை ஏற்படுத்த முடியாது என தெரிவித்து பாதை சேவையில் ஈடுபடுத்துமாறு தெரிவித்தமைக்கு இணங்க, மக்களின் எதிர்ப்பையும் மீறி பற்றுச் சீட்டு வழங்கி நிதி வசூலித்த பின்னர்   போக்குவரத்து   இடம்பெற்றது. 

குருமண்வெளி – மண்டூர் ஓடத்துறைக்கு நிரந்தர பாலம் அமைப்பதற்காக வேண்டி கடந்த காலங்களில் பல தடவைகள் அடிக்கல் நடப்பட்ட நிலையிலும் அது இதுவரையில் கைகூடாத நிலையிலேயே இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .