2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2017 நவம்பர் 25 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானங்களை மேற்கொள்ளப்படுகின்றபோது, இராணுவப் புலனாய்வாளர்கள், பொலிஸார் சென்று மக்களைக் கேள்விகள் கேட்டு அச்சுறுத்தல்கள் விடுத்துள்ளதாக அறிகின்றோம். மக்கள், இது தொடர்பில் அச்சங் கொள்ளத் தேவையில்லை” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட காரியாலயத்தில் இன்று (25) காலை நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் ​மேலும் தெரிவிக்கையில்,

“மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தும் பொதுமக்கள், மற்றும் அமைப்புகளாலும் துப்பரவு செய்யப்பட்டு, மாவீரர் நாள் நினைவுக்காகத் தயாராகியிருக்கின்றன.

“எதிர்வரும் திங்கட்கிழமை (27) மாலை 6.05 மணிக்கு, மக்கள் எவ்விதமான அச்சமுமின்றி, மாவீர்ர்களுக்கான அஞ்சலியைச் செலுத்த முடியும்.

“மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரை, தரரவை, தாண்டியடியில் துயிலுமில்லங்கள் இருக்கின்றன. தாண்டியடி துயிலுமில்லம், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மக்கள் அங்கு சென்று அஞ்சலி செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

“வாகரையைப் பொறுத்தவரையில் சட்ட ரீதியான அனுமதி பெற்று, பொலிஸ் நிலையங்களில் அனுமதிகளைப் பெற்றே அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, அஞ்சலி செலுத்துவதில் மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

“மாவீரர் தினம் என்பது, தமிழர்களின் இன விடுதலைக்காக தங்களை ஆகுதிகளாக்கிக் கொண்டவர்களை நினைவு கூரும் நாளாகும்.

“எனவே, மாவீரர்களின் பெற்றோர், உறவினர்களால் வருடா வருடம் நினைவு கூரப்பட்டு வரும் வகையில், அனைவரும் அஞ்சலிகளைச் செலுத்வோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X