2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விடுதி வசதி கோரி பல்கலைக்கழகப் பேரவைக் கட்டடத்தில் தங்கியிருந்து மாணவர்கள் போராட்டம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 18 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விடுதி வசதி கோரி இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகப் பேரவைக் கட்டடத்தில் மூன்றாவது நாளாக இன்று (18) தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
கடந்த திங்கட்கிழமை (16) தங்களுக்கு விடுதி வசதியை ஏற்படுத்தித் தருமாறு கோரி வந்தாறுமூலை வளாக முன்றலில் மேற்படி  மாணவர்கள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தங்களின் கோரிக்கைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் உரிய தீர்வு வழங்காமையை அடுத்து, மேற்படி பேரவைக் கட்டடத்தில் தாம்  தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அம்மாணவர்கள் தெரிவித்தனர்.
 
இது தொடர்பாக அம்மாணவர்கள் தெரிவித்தபோது, 'எங்களின் கோரிக்கை தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் பல தடவைகள் தெரியப்படுத்தினோம். ஆனால், நிர்வாகத்தால் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.

வெளி இடங்களில் நாங்கள் தங்குவதாயின், மாதாந்தம் 5,000 ரூபாய் வாடகையாகச்  செலுத்த நேரிடுகின்றது. எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் எமக்கு விடுதி வசதியை  ஏற்படுத்தித் தரும்வரை எமது போராட்டம் தொடரும்' என்றனர்.

இது தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழகப் பதில் பதிவாளர் த.பாஸ்கரனிடம் கேட்டபோது, 'நாட்;டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதி வழங்கப்படுவதில்லை. கடந்த கால அசாதாரண சூழ்நிலையின்போது, முதலாம் வருடத்துக்கான குறைந்தளவான மாணவர்கள் விடுதி வசதியைப் பெற்றுக்கொண்டனர். இந்நிலையில், விடுதி வசதி எஞ்சியிருந்த நிலையில், ஏனைய வருட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இம்முறை முதலாம் வருடத்துக்கு மேலதிகமாக 600 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு கட்டாயமாக விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இதன்  காரணமாகப் பரீட்சை எழுதும்; மாணவர்கள் தவிர, ஏனைய மாணவர்களை செவ்வாய்க்கிழமையுடன் (17) விடுதியிலிருந்து வெளியேறுமாறு  பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X