2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நீரிழிவு நோயாளர்களின் கவனத்திற்கு...

A.P.Mathan   / 2013 ஜனவரி 16 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


நீரிழிவு நோய் இன்று உலகில் பலரையும் அச்சுறுத்தும் ஒரு நோயாக காணப்படுகிறது. எமது உடம்பில் காணப்படும் இன்சுலின் என்ற மிக முக்கியமான ஹோமோன் உற்பத்தியாதல் மற்றும் அதன் செயற்பாடுகளில் ஏற்படும் குறைபாடுகளால், இரத்தத்தில் காணப்படும் சக்கரையின் அளவு அதிகரிக்கின்றது. இவ்வாறு உடம்பில் சக்கரையின் அளவு அதிகரிப்பதே நீரிழிவு நோய் எனப்படுகிறது.

உணவுக்கட்டுப்பாடு, மருந்துவ சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி என்பவற்றின் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அதன் சாத்தியம் நோயாளர்களின் கைகளில் தான் உள்ளது. நோயாளர்கள் அலட்சியமாக இருப்பார்களேயானால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் பாரதூரமானதாகி விடும்.

அவற்றில் ஒன்று தான் நீழிவு நோயாளர்களுக்கு ஏற்படும் காயங்கள். இது தொடர்பில் அவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். பெரும்பாலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கட்டாயம் தமது உடம்பில் காயங்கள் ஏற்பாடத வண்ணம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதிலும் கால்களை மிகவும் உன்னிப்பாக ஒவ்வொரு நாளும் அவதானிக்க வேண்டும். காரணம் 5 வருடத்திற்கு மேல் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்குமாயின், அவர்களது பாதங்கள் பெரும்பாலும் விறைப்படைந்து உணர்ச்சியற்றதாகவே இருக்கும். எனவே கால்களில் முள்ளோ, கல்லோ குத்தி காயத்தை ஏற்படுத்துமாயின் அதனை அவர்களால் உணர்ந்துகொள்ள முடியாது. கால்களில் தான் காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். எனவே கால்களில் அவ்வாறு காயங்கள் ஏற்படாமல் எவ்வாறு தவிர்த்துக்கொள்ளலாம் என்பது பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் வெறுங்கால்களுடன் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தளவுக்கு பாதணிகளை அணிந்துகொள்ள வேண்டும். அதிலும் அவர்களுக்கென்றே விஷேடமாக தயாரிக்கப்பட்ட பாதணிகள் தற்போது பாவனையில் உள்ளன. அவற்றை வாங்கிப் பாவிப்பது மிகவும் சிறந்தது. இதன் மூலம் கால்களில் காயம் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும். அத்துடன் இரவில் நித்திரைக்குச் செல்லும் முன் கால்களை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்வதுடன், கால் மற்றும் கால் விரல் இடுக்குகளில் ஏதேனும் காயங்கள் அல்லது சிராய்ப்புகள் இருக்கின்றனவா? என்பதை ஒவ்வொரு நாளும் அவதானித்துப் பார்க்க வேண்டும். அதை மீறியும் காயங்கள் அல்லது புண்கள் ஏற்படுமாயின் அதனை எவ்வாறு மாற்றிக்கொள்ளலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

சிலருக்கு காயம் அல்லது புண் ஏற்பட்டு நீண்டகாலம் மாறாமல் இருக்குமாயின் அது தொடர்பில் உடனடியாக அவர்கள் வைத்திய ஆலோசனையை பெறுவதுதான் மிகவும் சிறந்தது. காரணம் நீரிழிவு நோயாளர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு நியுற்றிசியன்கள் குறைவாகவே தான் காணப்படும். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தியும் இயல்பாகவே அவர்களிடம் குறைவாகத்தான் இருக்கும். இதனால் தான் நீரிழிவு நோயாளர்களுக்கு ஏற்படும் புண்களோ காயங்களோ இலகுவில் மாறுவதில்லை.

எனவே அப்படியானவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்வதற்காக வைத்திய ஆலாசனையுடன் Antibiotic போன்ற விற்றமின்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் காயம் அல்லது புண் ஏற்பட்ட பகுதியை கிருமி தொற்றாத வண்ணம் எப்போதும் மூடியே வைத்துக்கொள்ள வேண்டும். சிலவேளைகளில் கிருமி தொற்றுக்குள்ளானால் பயப்படத் தேவையில்லை. உடனடியாக வைத்தியரை நாடுவதன் மூலம் கிருமி தொற்றை நீக்கி, Skingraft போன்ற சில சத்திரசிகிச்சைகளின் மூலம் புண்களையும் இலகுவாக மாற்றிக்கொள்ள முடியும். இதில் கவனம் குறைவாக இருப்பீர்களேயானால் உங்கள் கால்களையே சில சமயங்களில் இழந்துவிடக்கூட நேரிடலாம்.

எனவே பொதுவாகவே நீரிழிவு நோயாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் காயம் அல்லது புண் ஏற்படுமாயின் அதனை மாற்றுவது கொஞ்சம் கடினம் தான். அது நோயாளர்களதும் நோயினதும் தன்மையை பொறுத்தே தான் அமையும்.

ஆகவே நீரிழிவு நோயாளர்கள் பெரும்பாலும் உடம்பில் காயம் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்வீர்களேயானால் அதனால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்தும் உங்களை இலகுவாக பாதுகாத்துக்கொள்ள முடியும் அல்லவா.

-தம்பி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X