2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஊவா மாகாண சபையில் சர்ச்சை

Sudharshini   / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜ்

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மற்றும்; ஊவா மாகாண முன்னாள் கல்வியமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகிய இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகி நாடாளுமன்றத்துக்கு சென்றுள்ள நிலையில், ஊவா மாகாண சபையால் வழங்கப்பட்டிருந்த வாகனங்களை இதுவரையிலும் அவர்கள் ஒப்படைக்கவில்லை என கூறி, நேற்று நடைபெற்ற அமர்வின் போது சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

ஊவா மாகாண சபை அமர்வு, அவைத் தலைவர் ஏ.எம்.புத்ததாச தலைமையில் நேற்று (21) நடைபெற்றது.

இதன்போது, மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சமந்த வித்தியாரட்ண இது குறித்து சபையில் குறிப்பிடுகையில், 'ஊவா மாகாண முதலமைச்சருக்கு 450 இலட்சம் ரூபாய் பெறுமதியான அதி சொகுசு வாகனம் வழங்கப்பட்டிருந்தது. அவர், நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான பின்னரும், மாகாண சபையில் ஒப்படைக்காமல் தொடர்ந்தும் அந்த வாகனத்தையே பயன்படுத்தி வருகின்றார்.

அடுத்ததாக, ஊவா மாகாண சபையின் கல்வியமைச்சராக இருந்த வடிவேல் சுரேஷ், நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னரும்  ஊவா மாகாண சபையால் வழங்கப்பட்ட வாகனத்தை சபையில் ஒப்படைக்காமல் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றார். இவ்விரு வாகனங்கள் தொடர்பிலும் தற்போதைய ஊவா மாகாண முதலமைச்சரே பொறுப்புக்கூற வேண்டும்' என்றார்.

'இவர்கள், சட்டவிரோதமாக மேற்படி வாகனங்களை தம்மிடம் வைத்துள்ளனர். எனவே, குறித்த இரண்டு வாகனங்களையும் உடனடியாக  மாகாண சபையில் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.

இதற்கு பதிலளித்த ஊவா மாகாண முதலமைச்சர், 'நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர், மாகாண சபையின் உயர் அதிகாரிகளை அழைத்து எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் சபையின் வளங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்தேன்.

இதன்போது, இந்த வாகனங்கள் குறித்தும் எனக்கு அறிவிக்கப்பட்டது. வாகனங்களை வழங்கியவர்களே அவற்றை மீள பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன், முன்னாள் முதலமைச்சர் பயன்படுத்திய சொகுசு வாகனம் எனக்கு தேவையில்லை. அத்தகைய வாகனத்தை என்னால் பராமரிக்க முடியாது. இவ் வாகனங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்'; என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .