2026 மே 15, வெள்ளிக்கிழமை

வருமான ஏற்றத்தாழ்வே தொழிலாளர்களை இடம்பெயர செய்கின்றது

Kogilavani   / 2015 ஏப்ரல் 05 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டங்களில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் இடம்பெயர்வதாக மலையக இளைஞர் உதயத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

'பெருந்தோட்டத்துறையில்,தோட்டங்களின் நிலப்பரப்பு குறைந்து வருகின்றன. வருமான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் இடம்பெயர்கின்றனர். இதனை தடுப்பதற்குரிய மூலோபாயங்களை தலைமைகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளவேண்டும்' என அவர் தெரிவித்தார்.

'அரசியல் கட்சிகள்,தொழிற்சங்கங்கள் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெறும் மக்கள் பிரதிநிதிகள், குறுகிய சிந்தனையின்றி சிறந்த சமூக தலைமைகளாக மாறி செயற்படுவதனூடாகவே மலையக மக்களின் பிரச்சினைகளை வெகு சீக்கிரத்தில் தீர்க்கமுடியும்' எனவும் அவர் தெரிவித்தார்.

கொட்டகலை பிரதேச மக்கள் சந்திப்பு, கொட்டகலை முத்துவிநாயகர் தேவஸ்தான மண்டபத்தில் சனிக்கிழமை (4)  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை வலியுறுத்தினார்.  

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இன்று தோட்டத் தொழிலாளர்களுக்கும்  அப்பால் அந்த வர்க்கத்திலிருந்து பல்வேறு துறைசார்ந்தவர்கள் உருவாகிவரும் நிலையில்,  அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் இன்று தீர்க்கப்படவேண்டிய நிலையில் உள்ளன.  மலையக அரசியல்வாதிகள் தொடர்ந்து பிளவுபட்ட நிலையிலிருந்து அம்மக்களின்;; பிரச்சினைகளை தீர்க்கமுடியாது.  நாட்டின் பொருளாதாரத்தில்; முதுகெலும்பாக விளங்கி, அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதில் பெரும்பங்கு வகித்துவரும் தோட்டத் தொழிலாளர்களின் அபிவிருத்தியின் நகர்வானது, ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும்போது மந்தகதியிலேயே இடம்பெறுகின்றது.

ஆட்சி மாற்றத்துக்கு பெரும் பங்காற்றிய மலையக மக்களுக்கு தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும்; பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள முனைப்போடு செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், மலையக இளைஞர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்களில் நிலவும் பிரச்சினைகளைதீர்ப்பதற்கு இவர்கள் வழியமைக்கவேண்டும்.

பல்வேறு துறைகளில் திறமையானவர்களாக உள்ளபோதும்,  மலையக இளைஞர்,  யுவதிகளில்  பெரும்பாலானோர் அரச தொழில்வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர். இந்த நிலைமைகளை மாற்றுவதற்குரிய அடித்தளத்தை மலையகத்தில் இடுவதற்கு,அனைவரும் ஒன்றுபடவேண்டும். அதற்குரிய சரியான தலைமைகளை மக்கள் இனங்காணவேண்டும்' எனஅவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது,  கொட்டகலை பிரதேசத்துக்குட்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு குறைபாடுகள்; மற்றும் பிரச்சினைகள் தொடர்பான மகஜரொன்றும் அவரிடம் கையளிக்கப்பட்டது.

கொட்டியாகலை தோட்டத்திலிருந்து இலங்கை வலைபந்தாட்டக் குழுவில் இணைத்துக்கொள்ளப்பபட்ட இராமச்சந்திரன் சசிகலாவுக்கு ஒருதொகுதி விளையாட்டு உபகாணங்களையும் மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார் இதன்போதுகையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .