2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

இளைஞனின் மரணத்துக்கு வைத்தியசாலையின் நிர்வாகமே காரணம்

Kogilavani   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட லிந்துலை, கவுலினா தோட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார் சத்தியசேகரன் (21 வயது) என்ற இளைஞனின் மரணத்துக்கு, லிந்துலை வைத்தியசாலையின் அலட்சியப்போக்கே காரணமென பிரதேசவாசிகள்; கண்டனம் தெரிவிப்பதோடு, வைத்தியசாலையின் நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றையும் நேற்று திங்கட்கிழமை முன்னெடுத்துள்ளனர்.  மேற்படி இளைஞனை பரிசோதித்த வைத்தியர், அலட்சியமாக நடந்துகொண்டதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இளைஞனை நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் அம்பியூலன்ஸ் வசதியை ஏற்படுத்தி தருமாறும் இளைஞனின் உறவினர்கள், வைத்தியசாலை நிர்வாகத்தைக் கோரிய போதிலும், அம்பியூலன்ஸ் வண்டியை செலுத்த சாரதி இல்லை என வைத்தியசாலை நிர்வாகம் கூறியுள்ளது. தாங்கள் முச்சக்கர வண்டியிலாவது இளைஞனை நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்கிறோம் எனக் கோரியபோதும், அதற்கும் வைத்தியசாலை நிர்வாகம் இணங்க மறுத்துள்ளது.

இந்நிலையில், இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சில மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் லிந்துலை வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, இளைஞன் வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு 5 நிமிடங்களில் உயிரிழந்ததாகவும் இளைஞனை வைத்தியசாலைக்கு அழைத்துவரும்போதே நாடித்துடிப்பின் வேகம் குறைவடைந்து காணப்பட்டதாகவும் எனவே அவரது உயிரைக் காப்பாற்ற முடியாது போனதெனவும் தெரிவித்தார்.  

உயிருக்கு ஆபத்தான நிலையில் இவ்வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட பலர், வைத்தியர்களில் அலட்சியப்போக்கால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து, அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ள போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மேலதிக பரிசோதனைக்காக இளைஞனின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .