2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தமிழில் தேசிய கீதம் அடங்கிய இறுவட்டுக்களை பாடசாலைகளுக்கு வழங்க வேண்டும்

Kogilavani   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தமிழில் தேசிய கீதம் அடங்கிய இறுவட்டுக்களை, மலையகத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவரும் கேகாலை மாவட்ட மூத்த தொழிற்சங்கவாதியுமான எஸ்.பி.அந்தோனிமுத்து தெரிவித்தார்.

'பெருந்தோட்ட பாடசாலைகளில் தற்போது நடைபெற்று வரும் இல்ல விளையாட்டுப்போட்டிகளில் மட்டுமன்றி, அனைத்து நிகழ்வுகளிலும் தமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார்.

கேகாலை, புளத்கொஹுபிட்டிய - வெற்றிலையூர் தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற  வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய  போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், '68ஆவது சுதந்திரதின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது. இதனை தொடர்ந்து செயற்படுத்த வேண்டும். ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம்தான் இதனை செய்ய வேண்டும் என கருதாமல் தமிழ்பேசும் தமிழர்-முஸ்லிம்கள் அனைவரும்; அவரவர் நடத்தும் நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் பாடுவதை  நடைமுறைப்படுத்த வேண்டும்' என்றார்.

'மலையக இளைஞர்கள், சாத்வீக போராட்டங்களன்றி, சாபக்கேடான செயல்களுக்கு தம்மை அர்ப்பணித்தவர்கள் அல்ல என்பதை அனுபவ ரீதியில் நான் நன்கு அறிந்தவன்.  இன்றைய சந்ததிகளான நீங்களே, எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியவர்கள். எனவே,  இளைஞர் தலைமைத்துவங்களை தனதாக்கிக்கொள்வதற்கான தகுதி உடையவர்களாக நீங்கள் மாறவேண்டும்' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .