2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மாணவனின் மரணத்துக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சங்கீதன்

நுவரெலியா, ஹாவாஎலிய பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் பாதுகாப்பு வேலியில், தனியார் பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த அக்கல்லூரி மாணவனின் மரணத்துக்கு நீதி கோரி, மாணவர்கள், பெற்றோர்கள், இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, இன்று புதன்கிழமை (24) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

நேற்று காலை 9.30 மணிமுதல் 11.00 மணிவரை முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'ஏனைய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்க வேண்டும், விபத்து தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்த நுவரெலியா பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.விமலதாச, நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதும் அது வெற்றியளிக்கவில்லை.

இதனையடுத்து, அங்கு வருகை தந்த மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்களான எம்.சந்திரன், ஆர்.கேதீஸ் நுவரெலியா வலய கல்விப்பணிப்பாளர் எம்.ஜி.ஏ.பியதாச, உதவி கல்வி பணிப்பாளர்களான மோகன்ராஜ் சோமசுந்தரம், கல்லூரி அதிபர் எம்.விஸ்வநாதன் மற்றும் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோருக்கும்  உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.விமலதாசவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் வாக்குறுதி வழங்கியதை அடுத்தே ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, மாணவர்கள் வகுப்பறைகளுக்குச் சென்றனர்.

செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற மேற்படி விபத்தில், கல்லூரியில் தரம் 4இல் கல்வி பயிலும் எம்.சுகிர்தன் (வயது 9) என்ற மாணவன் விபத்துக்குள்ளான நிலையில், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (24) அதிகாலை உயிரிழந்தார்.

சம்பவத்தில் காயமடைந்த புஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .