2026 மார்ச் 30, திங்கட்கிழமை

விடுதலைப் போராட்டத்துக்கு மலையக மக்களும் பெரும் பங்களிப்பு

Freelancer   / 2022 மார்ச் 06 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கணேசன்) 

வடக்கு, கிழக்குத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு மலையக மக்களும் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர். இதனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் அவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

-இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா நகரில் இன்று கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளது. அந்தவகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராகத் தற்போது ஓரணியில் திரண்டுள்ளோம். மக்களும் ஒன்றுபட்டுள்ளனர். எனவே, சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளியாகக்கூட இது அமையலாம்.

தற்போது பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, தமது அரசியல் எதிராளிகளை ஒடுக்குவதற்காகவே இந்தச் சட்டத்தை ஆளுந்தரப்பு பயன்படுத்தி வருகின்றது. இதனால்தான் அனைத்து இன மக்களையும் இந்தப்  பயணத்தில் இணைத்துள்ளோம்.

அதேவேளை, மலையக மக்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கப்படும் என அரசு கூறியது. ஆனால், அது உரிய வகையில் நடக்கவில்லை. அதற்கு எதிராக மக்கள் போராடினால், அவர்களுக்கு எதிராகவும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படலாம்; கைது செய்யப்படலாம்.

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மலையக மக்களே திகழ்கின்றனர். அந்தியச் செலாவணியைப்  பெற்றுக்கொடுக்கின்றனர். 

எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது. வாழ்த்துத் தெரிவித்து பதாதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கைத்தொழில் அமைச்சரான அவர், மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" - என்றார். (K)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .