2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கொழும்பிலுள்ள 3 தேசிய பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்: பிரபா எம்.பி

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 30 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மாகாணசபை பாடசாலைகளுக்கு கிடைக்கப்பெறும் நிதியினைவிட மிகக் குறைந்தளவிலேயே கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் தேசிய பாடசாலைகளுக்கு நிதி கிடைக்கப்பெறுகிறது. இதனை மாற்றியமைத்து மூன்று தேசிய பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு வருடமும் முழுமையான நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்' என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு கலைவிழாவின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

'மாகாணசபை பாடசாலை அபிவிருத்திக்கான நிதியினை மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் பேசி ஒவ்வொரு வருடமும் பெறக்கூடியதாக உள்ளது. ஆனால் கொழும்பு மாவட்டத்திலுள்ள மூன்று தமிழ் தேசிய பாடசாலைகளுக்கான நிதியினை மத்திய கல்வி அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. மத்திய கல்வி அமைச்சரிடம் இப்பாடசாலைகளுக்கான நிதியினைக் கோரியபொழுது தனது அமைச்சில் நிதி இல்லை எனவும் முடியுமானால் எனது பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து தனது அமைச்சிக்கு நிதியினை ஒதுக்கித்தருமாறு கேட்கின்றார்.

இப்படியான நிலையில் தேசிய பாடசாலைகளுக்கான நிதியினை எப்படி பெறுவது? இது சம்பந்தமாக கடந்த முறை ஜனாதிபதியை சந்தித்தபொழுது எனது முறைப்பாட்டை தெரிவித்திருந்தேன். அடுத்த முறை ஜனாதிபதியை சந்திக்கும் பொழுது இப்பாடசாலைகளுக்கான அதிகபட்ச நிதியினை ஜனாதிபதி மூலமாக பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.

இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி தலைநகர தமிழ் கல்வி சமூகத்திற்கு பாரிய சேவையினை செய்து வருவதை நாம் அறிவோம். வருட இறுதியில் இப்பாடசாலைக்கான அனுமதியைப் பெற்றுத்தருமாறு எனது அலுவலகத்திற்கு வரும் பெற்றோர்களின் தொகை பெரியளவிலானது. 2000ற்கும் அதிகமான மாணவிகளை கொண்டுள்ள இப்பாடசாலைக்கு பல தேவைகள் உள்ளன.

சென்ற வருடம் எனது நிதியிலிருந்து ஐந்து இலட்சம் மட்டுமே இப்பாடசாலைக்கு ஒதுக்கக்கூடியதாக இருந்தது. இது யானை பசிக்கு சோளப்பொறி போன்றதாகும். இந்த பாடசாலைக்கு கட்டிட தேவை இருப்பதாக அதிபர் என்னிடம் தெரிவித்துள்ளார். இப்பாடசாலையின்  ரம்ப பிரிவு மாணவிகளின் திறமை கண்கூடாக பாரக்கக்கூடியதாக உள்ளது. ஆரம்ப பிரிவிற்கு பொறுப்பான ஆசிரியை அகல்யா பிரபாகரனை பாராட்டுகின்றேன்.

ஆரம்ப பிரிவிலிருந்து கிடைக்கப்பெறும் பயிற்சிகளின் மூலமாகவே தலைசிறந்த மாணவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். இதனை இப்பாடசாலை செவ்வனே செய்து வருகின்றது.எனவே கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இக்கல்லூரியின் அபிவிருத்தி காலத்தின் கட்டாயமாகும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .