2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 17 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் வனாந்தரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முயற்சியை சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள வனபரிபாலன திணைக்களம் ஆரம்பித்துள்ளது.  இந்த முயற்சி உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம், ஐ.நா.வின் அபிவிருத்தித் திட்டம், ஐ.நா.வின் சுற்றாடல்  திட்டம் ஆகியவற்றின் துணையுடன் முன்னெடுக்கப்படுவதாக  ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'வளிமண்டலத்தின் பச்சைவீட்டு வாயுக்கள் அதிகரிப்பதற்கு காடழிப்பும் மரம் வெட்டுதலும் பிரதான காரணங்களாகும். அதனைத் தடுப்பதற்குரிய கூட்டு முயற்சியொன்றை ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்துள்ளது. UN-REDD என்ற பெயரில் ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம், ஐ.நா.வின் அபிவிருத்தித் திட்டப் பிரிவு, ஐ.நா.வின்  சுற்றாடல் திட்டம் ஆகியவற்றின் ஆற்றலும் நிபுணத்துவமும் பயன்படுத்தப்படும். இந்தத் திட்டமானது வளர்முக நாடுகள் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான மூலோபாயங்களையும் பொறிமுறைகளையும் வகுத்து அவற்றை அமுலாக்கத் துணைபுரியும்.

இலங்கையின் சுற்றாடல் அமைச்சானது உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம், ஐ.நா.வின் அபிவிருத்தித் திட்டம், ஐ.நா.வின் சுற்றாடல்  திட்டம் ஆகியவற்றுடன் கூட்டாக UN-REDD இன் மூலம் உதவி பெறக்கூடிய யோசனையொன்றை வகுத்திருக்கிறது. இது தொடர்பான ஆலோசனைகளைப் பெறுவதற்காக 2012ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி பயிலரங்கொன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் 50 இற்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்றார்கள். இதில் சகல பங்குதாரர்களும் பங்கேற்றார்கள். இதன் பிரகாரம், தேசிய செயலணியும் தொழில்நுட்பக்குழுவும் ஸ்தாபிக்கப்படும்.

வனாந்தர உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாப்பது இலங்கைக்கு மிகவும் ஏற்புடையதாகும். உயிர்ப் பன்முகத்தன்மை செறிந்துள்ள வனாந்தரங்கள் அழிவடையக்கூடிய அபாயத்தை எதிர்கொள்கின்றன. கடைசியாக மேற்கொள்ளப்பட்ட வனத்துறை ஆய்வின் பிரகாரம், இலங்கையின் நிலப்பரப்பில் 23.9 வீதம் இயற்கை வனாந்தரங்களால் சூழப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆறு தசாப்தங்களில் வனாந்தரங்கள் அழிவைக் கண்டிருந்தன. காடுகள் நிர்மூலமாக்கப்படுவதைத் தடுப்பதற்காக REDD பொறிமுறை காலநிலை மாற்ற சமவாயத்தில் சேர்க்கப்பட்டது' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .