2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கலாநிதி ரஞ்சித் தேவசிறியின் வீட்டுக்கு அயலில் சிலர் நடமாட்டம்; பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம்

Super User   / 2012 ஜூன் 21 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                          (ஒலிந்தி ஜயசுந்தர)

பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தனது வீட்டிற்கு அருகில் வந்து 17 வயதான தனது மகள் பற்றி விசாரித்ததாக பல்கலைக்கழக ஆசிரிய சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவரும் கொழும்பு பல்கலைக்கழக கலை பீட ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளருமான கலாநிதி ரஞ்சித் தேவசிறி கூறியுள்ளார்.

"அவர்கள் எனது அயலவர்களிடம் தமது அடையாள அட்டைகளை காட்டி, எனது மகள் பற்றி விசாரித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சில் தொழில் ஒன்றுக்காக விண்ணப்பித்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.  எனது மகள் மிக இளையவர். அவ்வறாறான தொழில் எதற்கும் அவர் விண்ணப்பிக்க முடியாது" என தேவசிறி கூறினார்.


இதேவேளை,  கலாநிதி ரஞ்சித் தேவசிறியின் வீட்டுக்கு அயலில் சந்தேகத்திற்கு இடமானோர் நடமாடியமை தொடர்பில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து, கொழும்பு பல்கலைக்கழக கலை பீட ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் போராசிரியர் அசங்க திலகரட்ன மற்றும் உதவி செயலாளர் கலாநிதி ஜே.டி.ஜயவர்தன ஆகியோர் ஜுன் 21ஆம் திகதி  பாதுகாப்பு செயலாளருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

கடந்த யூன் 19ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சை சேர்ந்தவர்கள் என கூறிய ஆட்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் முறையில்  கலாநிதி ரஞ்சித் தேவசிறியின் வீட்டுக்கு அருகாமையில் நடமாடியதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கலாநிதி ரஞ்சித் தேவசிறியின் நடமாட்டம் மற்றும் குடும்பம் பற்றியும் அயவர்களிடம் குறித்த நபர்களினால் விசாரிக்கப்பட்டதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றி உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த சங்கம் பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கடிதத்தின் பிரதிகள் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மற்றும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நடமாட்டம் தொடர்பில் ஜுன் 21ஆம் திகதி கலாநிதி ரஞ்சித் தேவசிறியினால் மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்ததக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .