2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அகிம்சை போராட்டத்தை குழப்பியமை ஏற்புடையதல்ல: பாஸ்கரா

A.P.Mathan   / 2012 ஜூன் 22 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மையில் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலுக்கு முன்பாக தாம் வாழ்ந்த, தமது உடமையை கேட்டு அகிம்சைப் போராட்டம் நடத்திய தன்நாட்டு மக்களை இலங்கை அரச படையினர் தடுக்க முற்பட்டவிதமும் அதற்குப் பின் அவ் அகிம்சைப் போராட்டத்தில் கலந்துவிட்டு வாகனத்தில் சென்ற மக்கள்மீது வாகனத்தையும் தாக்கி, மக்கள் மீது கழிவு எண்ணெய் ஊற்றித்தாக்கியமையும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஜனநாயகப் பண்புக்கு அப்பாற்பட்ட காட்டுமிராண்டித்தனமுமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்க்கரா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கண்டன செய்தியிலேயே மேற்படி குறிப்பிட்டுள்ளார். அக் கண்டன அறிக்கையில் தொடர்ந்து கூறியிருப்பதாவது...

அண்மையில் தாம் வாழ்ந்த பிரதேசத்தில் தமது நில புலங்களை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்தினர் அவ்விடத்திலிருந்து விலகி தமது வாழ்வாதாரத்திற்கும் தாம் வாழ்ந்த இடத்தில் வாழ்வதற்கு வழிவிடுமாறு அகிம்சைப் போராட்டத்தின் பின் மக்களின் குறைகாண் இடமாகவும் மக்களுக்கு உதவும் இடமுமாகவுள்ள பிரதேசசபையில் சென்று மகஜர் கையளிக்கமுற்பட்ட மக்களை பொலிஸார் தடுத்தது எவ்விதத்திலும் நியாப்படுத்தமுடியாது. மேலும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கௌரவ மாவை சேனாதிராஜாவுடன் பொலிஸார் முரண்பட்டவிதமும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அதேவேளை அவ்விடமானது ஓர் அமைதியானதும் எவ்வித பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அற்ற இடமாகவும், போக்குவரத்துக்கு இடஞ்சல் அற்ற இடமாகவுமுள்ள தமது பிரதேசசபைக்கு அம்மக்கள் செல்வதற்கு பொலிஸார் மறிப்பதை நியாயப்படுத்தமுடியாதுள்ளது. தொடர்ந்து இந்த அகிம்சைப் போராட்டத்தில் கலந்துவிட்டுச் சென்ற மக்கள் மீது கழிவு எண்ணெய் வீசித் தாக்கியதையும் அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலை புற்றுநோய் நிபுணர் டொக்டர் ஜெயக்குமார் மீதும் கழிவு எண்ணெய் ஊற்றித் தாக்கியதையும் பார்க்கும் பொழுது கிறீஸ் மனிதன், மர்ம மனிதன் என்ற போர்வையில் இப்பொழுது கழிவு எண்ணெய் ஊற்றித்தாக்கும் ஒரு கும்பல் தலைதூக்க இடமளிக்கப்பட்டுள்ளதா? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

அதேதினம் கொழும்பில் சனசந்தடி மிகுந்த போக்குவரத்து கூடிய கோட்டைப் பிரதேசத்தில் மக்கள் விடுதலை முன்னணி ஒழுங்கு செய்த ஊர்வலத்திற்கு பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளதைப் பார்க்கும்பொழுது தமிழ் மக்கள் தமது நாட்டு மக்கள் என பொலிஸார் சிந்திக்க மறுக்கின்றனரா? இல்லையேல் பாரபட்சத்துடன் நடக்க முற்படுகின்றனரா? என உற்றுநோக்க வேண்டியுள்ளது. இப்படியான போக்கு நீடித்துக்கொண்டிருக்கும் பொழுது அரசியல் தீர்வு என்பது எட்டாக்கனியாகப் போய்விடும் போல் தெரிகின்றது. எனியும் பாரபட்சம் இன்றி நீதியான நியாயமான குறைந்தபட்சம் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரைப்புக்களை நடைமுறைப்படுத்தி, தொடர்ந்து அரசியல் தீர்வுக்கு வழிசமைக்கமுற்பட்டு உலக அரங்கில் ஒரு நியாயமான நாடாக காண்பிப்பதற்கு முன்வரவேண்டும். இல்லையேல் நாடு அகலபாதாளத்தில் செல்வதை தடுக்க முடியாமல் போய்விடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .