2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அதிகாரங்களை பாதுகாக்க வேண்டிய சிக்கல் சிறுபான்மையினருக்கு ஏற்பட்டுள்ளது: மனோ

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 15 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச ஊழியரான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தனது வரம்பை மீறி அரசியல்வாதியைபோல் பேசுகிறார். அரசியலமைப்பில் இருக்கும் அதிகாரங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய சிக்கல் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றியுள்ளதாவது, நீங்கள் உள்ளூராட்சி தேர்தல் முறைமை மாற்றம் பற்றி கேட்கின்றீர்கள்.

புதிய சட்டங்களை பற்றி கேட்கின்றீர்கள். எமக்கு இன்றுள்ள முதன்மை பிரச்சினை இதுவல்ல. ஜனாதிபதியின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ, 13ஆம் திருத்தத்தை அகற்ற வேண்டும் என்றும், மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்றும் பேசுகிறார். இவர் இதை எந்த அதிகாரத்தில், எவ்விதம் சொல்லுகிறார் என எனக்கு தெரியவில்லை. அவர் இன்னமும் ஒரு அரசு ஊழியர். ஆனால் அவர் தனது வரம்பை மீறி அரசியல்வாதியைபோல் பேசுகிறார்.

இந்த கதைகளை பார்க்கும் போது உண்மையில், புதிய தேர்தல் முறைமையை கொண்டு வருவதற்கோ அல்லது புதிய சட்டங்களை கொண்டுவருவதற்கோ முன்னர், இருக்கும் சட்டங்களையும், அரசியலமைப்பில் இருக்கும் அதிகாரங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய சிக்கல் எமக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நாட்டில் வாழும் சிங்களவர் அல்லாத மக்களுக்கு குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இந்த நிலை இன்று ஏற்பட்டுள்ளதை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். விருப்பு வாக்கு முறைமை தீங்கானது என்று சொல்லி இந்த உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தை திருத்தி உள்ளார்கள். உண்மையில் அதுவல்ல இவர்களின் பிரதான நோக்கம்.

வட –  கிழக்குக்கு வெளியில் சிறுபான்மையினராக பல்லின சூழலில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவங்களை வெட்டி குறைப்பதே இவர்களது பிரதான நோக்கம்.

கடந்த தேர்தலின்போது கொழும்பு, கொலொன்னாவ பகுதியில் இரண்டு ஆளும் கட்சி அரசியல்வாதிகள் சுட்டுக்கொண்டார்கள். இதை அடுத்து இந்த விருப்பு வாக்கு முறைமையை மாற்ற வேண்டும் என்ற கூக்குரல் கூடியுள்ளது. விருப்பு வாக்கு முறையினால் ஒரே கட்சிக்குள் சச்சரவு ஏற்படுகிறது என சொல்கிறார்கள். உண்மையில், இது கட்சிகளின் ஒழுங்கு பிரச்சினை.

ஒரே கட்சி என்றபடியால் கொலொன்னாவயில் நான்கு பேர் உயிரிழந்தார்கள். அதுவே, இரண்டு வேவ்வேறு ஆளும் கட்சி, எதிர்கட்சிகளுக்கு இடையில் நடைபெற்று இருந்தால், நான்கு பேருக்கு பதில் நாற்பது பேர் உயிரிழந்திருப்பார்கள்.

எனவே இந்த சண்டைகளுக்கு காரணம், விருப்பு வாக்கு என்பது அல்ல. இந்த  நாட்டில் இன்று நிலவுகின்ற கொலைவெறி கலாசாரம்தான் அனைத்துக்கும் காரணம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .