2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பேரின இனவாதக் கட்சிகள் பிரிவினை பூச்சாண்டி காட்டுகின்றன: பாஸ்க்கரா

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 15 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மதிக்காத கட்சிகள் பிரிவினை பற்றி கவலைப்பட்டு அறிக்கைவிடுவது கேலிக்கூத்தானதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும் என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்க்கரா தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கையில்...

போர் முடிந்த மூன்று வருட காலத்தில் அரசியல் தீர்வு பற்றியோ அன்றேல் மக்களின் அடிப்படை தேவைகள் பற்றியோ இல்லையேல் வாழ்வாதார பிரச்சினைகள் பற்றியோ சிந்திக்காத அரசு, அரசு சார்ந்த இனவாத கட்சிகள் இன்று கூட்டமைப்பு இந்தியா சென்றதைப் பற்றி கூக்குரலிடுவது எவ்விதத்திலும் நியாயப்படுத்தமுடியாது.

அண்மைக் காலங்களில் வடமாகாணங்களில் நடைபெற்ற அகிம்சை போராட்டங்களில் எமது கட்சி உட்பட பங்குபற்றிய கட்சி அங்கத்தவர்கள் மீதும், மக்கள் மீதும் கழிவு எண்ணெய் ஊற்றி தாக்குதல், வாகன தாக்குதல் மற்றும் மக்களை பலவந்தமாக காடுகளில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் மீள்குடியேற்றம் என நிர்க்கதி நிலையில் விட்டமையுடன், சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரிய போது உயிரை விடுதலை செய்து விண்ணுலகம் அனுப்பியமை போன்ற வேளைகளில் கூட ஓர் அறிக்கையோ இல்லையேல் நாட்டு ஒற்றுமை பற்றியோ ஒரே மக்கள் என்றோ சிந்திக்காமல் வேற்றாத்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்ட பெரும்பான்மை இனவாத கட்சிகள் இன்று கூட்டமைப்பு இந்தியா சென்றபோது மாறிமாறி அலறி அடித்து கொண்டு அறிக்கை விடுவது எதற்காக?

அண்மையில் கூட்டமைப்பை பயன்படுத்தி பிரிவினைக்கு இந்தியா முயற்சி என குணதாச அமரசேகர அவர்களும் இந்தியாவுடன் ஜனாதிபதிக்கு இரகசிய உடன்படிக்கையில் விளைவே கூட்டமைப்பின் விஜயம் என ஜே.வி.பி. பொது செயலாளர் ரில்வின் சில்வாவும் தெரிவித்த கருத்துக்கள் எதற்காக? என்ன தேவைக்காக இலங்கையில் ஐக்கியமாக வாழ்வதற்கு சகல வழிகளில் தமிழ் மக்கள் சம்பந்தமாக உள்ளனர் என்ற செய்தியை மேதினத்தன்று தமிழ்தேசிய கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் தேசிய கொடியை தூக்கிக் காட்டிய பின்னராவது இவர்கள் உணர்ந்து தமிழ் மக்களும் எமது நாட்டு மக்கள் என்ற தோரணையில் நடந்து கொண்டிருக்க வேண்டும், இல்லையேல் அரசை வழிப்படுத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து இன்று கூட அடிப்படை வசதிகள் கூட செய்யாமல் மீண்டும் மீண்டும் இனவாத மதவாத கருத்துக்களை தெரிவித்து மக்களை மேலும் மேலும் மீளா துயரத்தில் தள்ளாமல் இருப்பதே இவர்கள் இலங்கைக்கு செய்யும் நன்மை பயக்கும் செயல்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .