2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அரசாங்கத்தை ஆதரிப்பது பிழை என்றால் எது சரி?: பிரபா எம்.பி

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 21 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தை ஆதரித்து நின்று இன்று பல தமிழ் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு முடிந்துள்ளது. ஏதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருந்து இதனை செய்திருக்க முடியுமா? என முகத்துவாரம் இந்து கல்லூரியின் கணித விழாவில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கேள்வி எழுப்பினார்.

மேலும் தனது உரையில் அவர் கூறுகையில்,

இன்று கொழும்பு மாவட்டத்தில் பல தமிழ் பாடலைகளின் கட்டிடங்கள் என் மூலம் கட்டப்பட்டு தளபாட பற்றாக்குறை நீக்கப்பட்டு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டு அபிவிருத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவை அனைத்தையும் செய்யக் கூடியதற்கான காரணம் நான் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதேயாகும். அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதும் அரசாங்கத்துடன் இணைந்திருப்பது எனபதும் இரண்டு விடயமாகும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசாங்கத்துடன் இணைந்து எனது சுய கௌரவத்தை நான் இழக்க விரும்பவில்லை. ஆனால் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து எமது மக்களின் கல்வியை வளர்ப்பதற்கான வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்கின்றேன். இது பிழை என்றால் எது சரி என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

அரசாங்கத்தின் இன்றைய தமிழ் மக்களின் எதிரான போக்கிற்கு எதிர்கட்சியிலிருந்து குரல் கொடுப்பவர்களை நான் மதிக்கின்றேன். ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இதனை சரிவர செய்கின்றார் என நான் உணர்கின்றேன். அவருக்குப் பின்னால் பத்தோடு பதினொன்றாக நான் நிற்பதினால் மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை.

அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் எமது மக்களுக்கான பணிகளை செவ்வனே செய்யக்கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது. குறிப்பாக தமிழ் கல்வி சமூகத்திற்கு சேவையாற்றக் கூடிய வசதிகள் அரசாங்கத்திடமிருந்து எனக்கு பெறக்கூடியதாக உள்ளது. இதனை தலைநகர தமிழ் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய முகத்துவாரம் இந்து கல்லுரிக்கு தேவையான ஒலிபெருக்கி வசதிகளை முழுமையான முறையில் இவ்வருடம் பெற்றுக் கொடுத்திருக்கின்றேன்.

இக்கல்லுரியைப் பொருத்தவரையில் யானை பசிக்கு சோளபொறி போன்றதாகும். ஏனெனில் இன்றைய தமிழ் பாடசாலைகளின்  தேவை பெரியளவிலாக உள்ளது. என்னைத் தவிர கொழும்பு மாவட்டத்தில் மாகாணசபை மட்டத்தில் நான்கு தமிழ் உறுப்பினர்கள் உள்ளனர். வெறுமனே கூரை தகடுகளை வழங்குவதிலும் சைக்கிள்களை கொடுப்பதிலும் எரிவாய்வு அடுப்புகளை வழங்குவதிலும் தையல் இயந்திரங்களை பெற்றுக் கொடுப்பதிலும் எமது சமூகத்தை வளர்ச்சிபெற செய்ய முடியாது. மாறாக கல்வி எனும் அறிவு கண்ணை திறக்க வைப்பதன் மூலமாகத்தான் எமது சமூகத்தை வளர்ச்சிபெற செய்யலாம்' என்றார்.

இந்நிகழ்வில் முகத்துவாரம் இந்து கல்லூரியின் அதிபர் செல்வி. முருகேசு ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுச்செயலாளர் கலாநிதி சுரேஷ் கங்காதரன் பாராளுமன்ற உறுப்பினரின் பாடசாலை நிதி ஒதுக்கீட்டுச் செயலாளர் எம். பிருதிவிராஜ் மற்றும் ஏனைய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .