2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

'உரிமைகளை கேட்டால் துப்பாக்கியால் சுடுகின்றனர்'

Kogilavani   / 2014 மே 02 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட். ஷாஜஹான்


 'சுத்தமான தண்ணீர் கேட்டாலும், மண்ணெண்ணெய் மானியம் கேட்டாலும், உரிமைகளை கேட்டாலும் துப்பாக்கிச் சூடே நடத்தப்படுகிறது' என்று மனித உரிமை செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாந்து தெரிவித்தார்.

மறைந்த ரொசான் சானக்கவின் நினைவு தினத்தையொட்டி வியாழக்கிழமை (01) கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மணிக்கூட்டு கோபுரம் அருகில் நடைபெற்ற நினைவுதின நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 'அரசாங்கம் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு ஆட்சி புரிகின்றது. அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலேயே சுதந்திர வரத்தக வலய ஊழியர் ரொசான் சானக்க பொலிஸாரினால் சுட்டுக் கொலப்பட்டார்.

அதேபோன்று சுத்தமான தண்ணீர் கேட்ட ரத்துபஸ்வல மக்கள் மீதும், சிலாபம் மீனவர் அன்டனி மீதும் பொலிஸாரே துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து தடுப்புக் காவலின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டையில் பொலிஸாரின் முன்னிலையில் ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட போதும் பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை' என்று தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தனியார் உத்தேச ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2011 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கட்டுநாயக்க சுதந்திர வரத்தக வலய ஊழியர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது சுதந்திர வர்த்தக வலய ஊழியர் ரொசான் சானக்க பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மனித உரிமை அமைப்புக்கள், சுதந்திர வரத்தக வலய ஒத்துழைப்பு அமைப்பு உட்பட பல்வேறு  சிவில் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர்.

மேலும் ரொசான் சானக்க மறைந்து  அடுத்த மாதம் மூன்றாண்டுகள் நிறைவடைவதையிட்டு ஜுன் மாதம்  முதலாம் திகதி விசேட நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .