2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

களுத்துறை தமிழ் மக்கள் அச்சத்துடனே வாழ்கின்றனராம்

A.P.Mathan   / 2014 மே 02 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


களுத்துறையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் இன்னமும் அச்சத்துடனேயே வாழ்கின்றனர். அவர்களால் சுயமாக இயங்கமுடியாத சூழலே காணப்படுகிறது என, தமிழர் முன்னேற்றக் கழக அறிமுக விழாவில் கலந்துகொண்ட களுத்துறைவாழ் தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

தமிழர் முன்னேற்றக் கழகம் தமது அறிமுக நிகழ்வை நேற்று (மே 01), களுத்துறை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய மண்டபத்தில் நடாத்தி இருந்தது. தமிழ் மக்களுக்கான தேசிய அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு ஒவ்வொரு மாவட்டமாக தமது அறிமுக நிகழ்வுகளை செய்து வருகின்றது. அந்த வகையில் களுத்துறை மாவட்ட மக்களின் கல்வி, கலை, கலாசார, அரசியல் தலைமைத்துவத்தை முன்னேற்றும் வகையில் அந்த மாவட்ட தமிழ் மக்களை ஒன்றிணைத்து ஓர் அமைப்பாக சேர்த்து முன்னேற்ற நடவைக்கைகளில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெற்றது.


ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் இந்த பிரதேசத்தில், முப்பதாயிரத்துக்கும் அண்மித்தவர்களே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அறுபத்தையாயிரத்துக்கும் அண்மித்தவர்களுக்கு வாக்களிக்கும் தகுதி இருந்தும், அவர்கள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் வாக்குப் பதிவுகளை செய்து, சரியான முறையில் வாக்களிப்பார்களானால், ஒரு தமிழருக்கு நிச்சயம் நாடாமன்றம் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், கல்வித் துறையில், சமய மற்றும் தமிழ்க் கல்வி பின்னடைந்துள்ள நிலை இந்த மாவடத்தில் உள்ளது. அவற்றை சீர் செய்ய வேண்டும். சரியான பாதையில் எடுத்துச் செல்லவேண்டும். இப்படியான நிலைகள் களுத்துறை மாவட்டத்தில் இருக்கின்றன. எனவே உங்களை அதாவது களுத்துறை தமிழ் மக்களை சரியான முறையில் இவற்றுக்கு வழிகாட்ட செய்வதன் மூலம் களுத்துறையில் உள்ள மக்களுக்கு சரியான விழிப்புணர்ச்சியை ஏற்ப்படுத்த முடியும் என நம்புகின்றேன். அத்தோடு இந்த மாவட்டத்தில் இருந்து எதோ ஒருவகையில் ஒரு தமிழ் நாடாமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படவேண்டும். அதற்கு நாங்கள் எல்லோரும் சேர்ந்து உழைப்போம். உழைக்க வேண்டும் என தமிழர்  முன்னேற்றக் கழக பிரதம அமைப்பாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்தார்.  

இந்த நிகழ்வில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். இவர்களில் அநேகமானவர்கள் களுத்துறையில் வாழும் தமிழ் மக்கள் இன்னமும் அச்சத்துடனும், ஒரு வித பயத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை அழுத்தங்களை தாங்கள் இன்னமும் சந்தித்து வருகின்றோம் எனக் கூறினர். இயல்பாக தமிழ் மக்களாக வாழ முடியாத சூழல் இருபதாகவும், இதன் காரணமாக தோட்டப்புறங்களில் உள்ள மக்கள் தங்கள் சலுகைகளை இழந்து வருவதாகவும், அதனால் அடங்கிப் போக வேண்டிய நிலையில் இருந்து வருவதாகவும் தெரிவித்தனர். தங்களுக்கான சரியான ஓர் அரசியல் தலைமை இல்லை என்பதனையும் கல்வி, கலை கலாசாரம், வாக்குரிமை, வாக்குப்பதிவு தொடர்பில் அவர்களுக்கு போதிய அறிவின்மை இருக்கின்றமையினால், இவை தொடர்பில் அவர்களுக்கு ஒவ்வொரு தோட்டங்களுக்கு தனித்தனியா சென்று, அங்கே விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

அவர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசிய ஜனகன், இது உங்கள் அமைப்பு. நீங்களே இந்த நடவடிக்கைகளில் இறங்கவேண்டும். தமிழர் முன்னேற்றக் கழகம் அதற்கு உறுதுணையாக இருக்கும். நிச்சயம் இந்த விழிப்புணர்ச்சி நடவடிக்கைகளில் மிக விரைவில் களமிறங்குவோம் எனவும் தெரிவித்தார்.


இதேவேளை, இந்த அறிமுக நிகழ்வில் த.மு.க அமைப்பாளர் சந்திரசேகரன் விமலச்சந்திரன் உரையாற்றிய போது, தமிழர் முன்னேற்றக் கழகம், தமிழ் மகளுக்கான ஒரு தேசிய அமைப்பு.  அனைத்து மாவட்ட தமிழ் மக்களையும் இணைத்து ஒற்றுமையாக செயற்பட முனைகின்றது. இன்று இலங்கையில் தமிழ் மக்களுக்கான ஒரு தனி அமைப்பு தேசிய ரீதியில் இல்லை. மாவட்ட ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் பிரிந்துள்ளன. ஒற்றுமை அற்ற தன்மை இருக்கின்றது. இவற்றை கருத்திற்க் கொண்டு இந்த அமைப்பானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாமல் போனாலும் நீண்ட கால நோக்கில் இந்த அமைப்பின் மூலம் தேசிய ரீதியில் தமிழ் மக்களை ஒன்றிணைக்க முடியும். ஒற்றுமையான ஒரு பலமான அமைப்பாக உருவாக்க முடியும் என நம்புகின்றேன் என கூறியிருந்தார்.

தமிழர் முன்னேற்றக் கழகம் - தமிழ் மக்களின் கல்வி, கலை, கலாசார, அரசியல் தலைமைத்துவ முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் ஒரு தேசிய அமைப்பாக கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி கிளிநொச்சியில் அறிமுக நிகழ்வை நடாத்தி இருந்தது. தென் மாகணத்திலுள்ள தமிழ் மக்களுக்கும் கை கொடுப்போம் என்ற அடிப்படையில் களுத்துறையில் மூன்றாவது அறிமுக நிகழ்வு நடாத்தப்பட்டது. தொடர்ந்தும் ஒவ்வொரு மாவடங்களிலும் இதேபோன்ற நிகழ்வுகளும் உறுபினர்களை இணைத்து மாவட்ட மற்றும் கிராமிய அமைப்புக்களை உருவாகும் நடவடிக்கைகள் தொடரும் என தமிழர் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .