2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு: அமர்வில் பங்கேற்க அனுமதி

Kanagaraj   / 2014 மே 30 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பிலுள்ள வெளிநாட்டு நாணய மாற்ற முகவர் நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவின் விளக்கமறியலை ஜூன் 13 ஆம் திகதி வரை நீடிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், மாகாண சபையமர்வுகளில் பங்கேற்பதற்கு அவருக்கு அனுமதியளித்தார்.

நீர்கொழும்பில் அமைந்துள்ள நகை கடை மற்றும்  வெளிநாட்டு நாணய மாற்று நிலையமொன்றில்; கடந்த பெப்ரவரி மாதம் ஆயுத முனையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட    சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையிலேயே அவர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் விடுக்கப்பட்ட பிணை கோரிக்கையை நிராகரித்த நீர்கொழும்பு மேலதிக நீதவான் ஜி.எம். திலக்கரட்ன பண்டார சந்தேக நபருக்கான விளக்கமறியலை எதிர்வரும் ஜுன் மாதம் 13 ஆம் திகதி வரை நீடித்தார்.

ஆயுதங்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இக்கொள்ளைச் சம்பவத்தின் முதலாம் சந்தேக நபருக்கு பிணை வழங்க அதிகாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு கிடையாதென தெரிவித்த நீதவான் பிணை கோரிக்கையை நிராகரித்தார்.

பிரதான சந்தேகநபர், மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையால் அவரை மாகாண சபை அமர்வுகளில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் பங்குபற்றுவதற்கு  நீதவான் அனுமதியளித்தார்.

அத்துடன் இந்த வழக்குத் தொடர்பாக பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபரின் வாகனத்தை 50 ஆயிரம் ரூபா பிணையில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.

 நீர்கொழும்பு  பிரதான வீதியில் அமைந்துள்ள நகை மற்றும்  வெளிநாட்டுநாட்டு நாணயமாற்று முகவர் நிலையத்தில் ஆயுத முனையில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஹெல்மட் அணிந்து வந்த துப்பாக்கிதாரிகள் நால்வரால்;  பல கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக  சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் சந்தேகத்தின் பேரில்  செய்யப்பட்டனர்.

ரொயிஸ் விஜித்த பெர்னாந்து உட்பட மற்றைய சந்தேக நபர்கள் இருவர் அடங்களாக மூன்று சந்தேக நபர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று மாத காலம் தடுப்புக் காவல்  உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில்,  இவர்கள் அனைவரும் கடந்த மே மாதம் 21 நீதவான்  நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி. அமரசிங்க சந்தேக நபர்களை  மே 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

ஏனைய சந்தேக நபர்கள் இருவரையும் அண்றையதினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .