-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு வைத்தியசாலையின் முன்பாக பாதை மாற முயன்ற வயோதிபப் பெண்ணொருவர் வாகனத்தில் மோதி ஸ்தலத்திலேயே பரிதாபகரமாக மரணத்தை தழுவியதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 70 வயது மதிக்கத்தக்க பெண்னொருவரே சம்பவத்தில் பலியானவராவார்.
குறித்த பெண், இன்று காலை மினுவாங்கொடையிலிருந்து நீர்கொழும்பு நோக்கி வரும் 245 ஆம் இலக்க பஸ்ஸில் பயணித்து நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் முன்பாக வந்து இறங்கியுள்ளார். பின்னர் அவர் வைத்தியசாலைக்கு செல்வதற்காக பாதையை கடக்கும் போதே வேகமாக வந்து வேன் ஒன்றில் மோதியுள்ளார்.
விபத்துச் சம்பவத்தை அடுத்து வேன் சாரதியான ஜா– எல பிரதேசத்தைச் சேர்ந்த புத்தக சம்பத் என்ற 25 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தலவில தேவாலயத்துக்கு குழுவொன்றினை ஏற்றிச் சென்ற வாகனத்தில் மோதியே குறித்த வயோதிபப் பெண் மரணமாகியுள்ளார்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.