Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஜூன் 24 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவிசாவளை, புவக்பிடிய வெருளுபிடிய பிரதேச, புதுக்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்றுள்ள தமிழ் - சிங்கள இளைஞர் மத்தியிலான மோதலினால் பதற்ற நிலைமை உருவாகியுள்ளது. பதற்ற நிலைமை நிலவிய சம்பவ இடத்துக்கு நேற்று வியாழக்கிழமை (23) நேரடியாக விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இயல்பு நிலைமையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணித்து முன்னெடுத்தார்.
அமைச்சரின் பணிப்புரையின்படி பிரதி பொலிஸ் மா அதிபர் ரோஹான் டயஸ், விவகாரத்தை நேரடியாகப் பொறுப்பேற்று பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் மனோ கணேசன் காயமடைந்தவர்களையும் பார்வையிட்டு, ஆறுதல் கூறி, அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் உத்தரவாதம் அளித்தார். சம்பவ இடத்துக்கு அவிசாவளை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சீ.ஐ. சேனநாயக்கவை நேரடியாக வரவழைத்து, தமிழ் மக்களுடன் கலந்துரையாட செய்து, மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் உரிய பணிப்புரைகளை விடுத்துள்ளார்.
பிரதேசத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலைவரை, பிரதான சந்தேகநபர் உட்பட, நான்கு பெரும்பான்மை இன சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இன்னும் 10 பேர்வரை தேடப்பட்டு வருகின்றனர் என அவிசாவளை தலைமையகப் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது,
அவிசாவளை, புவக்பிடிய புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த வன்முறை தொடர்பில், கைது செய்யப்படுபவர்களுக்குப் பிணை வழங்க எக்காரணம் கொண்டும் பொலிஸ் உடன்படக்கூடாது என அவிசாவளை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சீ.ஐ சேனநாயக்கவிடம் கண்டிப்பாக கூறியுள்ளேன்.
இன்று காலைவரை பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னமும் சுமார் பத்து பேர் தேடப்படுகின்றனர். நேற்று புதன்கிழமை இரவு சம்பவத்தில் காயமடைந்த தமிழ் இளைஞர்களில் மூவர் அவிசாவளையிலும், இருவர் கொழும்பிலும் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று மாலை நான் அவிசாவளை சென்று திரும்பிய பின் இரவு, அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய பெரும்பான்மை நபர்களை தமிழ் இளைஞர்கள் விரட்டி அடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வது ஒருபுறம் இருக்க, இந்தப் பகுதியில் பல வருடங்களாகவே மலையுச்சி புதுக்குடியிருப்பு கிராமத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும், அடிவாரத்து வெருளுபிடிய கிராமத்தில் வாழும் பெரும்பான்மை இன நபர்களுக்கும் இடையில் முறுகல் நிலைமை நிலவுவதை தமிழ் மக்கள் என்னிடம் எடுத்து கூறினார்கள்.
இதை செவி மடுத்து, இந்த பின்னணியை கவனத்தில் எடுக்கும்படி பொலிஸாருக்கு நான் கூறியுள்ளேன். அனைத்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்பட்ட பின்னர், அப்பகுதியில் சிங்கள, தமிழ் சமூகப் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், தமிழ், சிங்கள மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சமாதானகுழுவை ஸ்தாபிக்கும்படியும், இந்த கூட்டத்தில் நானும் கலந்துகொள்வேன் என பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கூறியுள்ளேன். அதற்கான உடன்பாடு நேற்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த கால யுத்த மற்றும் இனவாத சூழல் தற்போது இல்லை. எனவே, மீண்டும் பழைய பழக்கத்தில், தனிப்பட்ட முரண்பாடுகளை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்கள் மீது இனவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும், இனி இத்தகைய சம்பவங்கள் நடைபெறுமானால், பொலிஸ்துறை பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளேன்.
இனி இந்த பகுதியில் இனவாத நோக்கில் சம்பவங்கள் நடைபெறாவண்ணம் உறுதி செய்வதாக, பிரதி பொலிஸ் மாஅதிபர் ரோஹான் டயஸ், அவிசாவளை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சீ.ஐ சேனநாயக்க ஆகியோர் என்னிடம் உறுதியளித்துள்ளனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
10 minute ago
11 minute ago