2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

லலித், குகன் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2012 மே 23 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                                            (கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும்   'நாம் இலங்கையர் இயக்கத்தின்' தொண்டர்களான வீரராஜா லலித்குமார் மற்றும் கிட்ணன் முருகானந்தன் குகன் தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜுலை மாதம் 24ஆம் திகதிக்கு யாழ். நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா ஒத்திவைத்தார்.

இன்று புதன்கிழமை காலை யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,  எதிர்த்தரப்பினர் இந்த வழக்கிற்கு வரக்கூடிய நிலையில் இல்லை எனவும் கால அவகாசம் தருமாறும் அரசாங்க சட்டத்தரணி எஸ்.திருக்குமரன் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து  யாழ். நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா இந்த வழக்கை ஒத்திவைத்தார்.

இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன், யாழ். அச்சுவேலி பொலிஸ் அத்தியட்சகர்,  முறைப்பாட்டாளரான முருகானந்தா ஜெனதா ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறி மே 9ஆம் திகதி யாழ். நீதிவான் நீதிமன்றம்  அழைப்பாணை விடுத்தது.

இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை இன்றையதினம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இராணுவத்தினர்     சார்பாக அவர்களது பிரதிநிதி மகோலனா, அச்சுவேலிப் பொலிஸார் சார்பாக காங்கேசன்துறை பொலிஸ் பரிசோதகர் காமினி பெரேரா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

முறைப்பாட்டாளர் சார்பாக முருகானந்தா ஜெனதா, வீரராஜா லலித்குமாரின் தந்தை வீரதுங்க நீதிமன்றத்தில் ஆஜராகினர்.  இவர்கள் சார்பாக சட்டத்தரணி ருவான் போபகே ஆஜரானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .