2025 ஜூன் 18, புதன்கிழமை

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதானாவர் விடுதலை

Kanagaraj   / 2013 ஏப்ரல் 05 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபர் யாழ். மேல் நீதிமன்றினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். முதலைக்குடி கரணவாய் பகுதியைச் சேர்ந்த புஸ்பானந்தராசா புஸ்பரூபன் (வயது 35) என்பவரே இவ்வாறு விடுதலைச்செய்யப்பட்டுள்ளார்.

இவர், விடுதலைப்புலி இயக்கத்தில் இருந்து ஆயுதப்பயிற்சி மற்றும் கப்பல் திருத்தும் பணியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி  ஓமந்தைப் பகுதியில் வைத்து புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இவர் புலனாய்வு பிரிவினரால் 4 ஆம் மாடியில் விசாரிக்கப்பட்டு பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். அதன் பின்னர் யாழ். மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபரினால் அளிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் சான்றாக வைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் பின்னர் 16.01.2013 ஆம் ஆண்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் யாழ். மேல் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது.

மேற்படி வழக்கினை,  இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அரச சட்டவாதி நளினி கந்தசாமி இவருக்கு எதிரான வேறு சான்றுகள் இல்லை என மன்றில் தெரிவித்தமைக்கு அமைவாக யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இவருக்கு எதிராக இதே குற்றச்சாட்டில் வவுனியா மற்றும் மன்னார் நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருப்பதனால், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் மேலும் உத்தரவிட்டார். சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி முடியப்பு ரெமீடியஸ் ஆஜராகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .