2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஒற்றுமையான தீர்வினையே கேட்கின்றோம்: சம்பந்தன்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

ஒருமித்த நாட்டிற்குள் ஒரு ஒற்றுமையான  தீர்வினை கேட்டிருக்கின்றோம் என்பதனை யாரும் மறுக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட காரியாலயத்தில் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக எழுந்த கருத்துக்களுக்கான விளக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது பற்றி தெளிவாக கூறியிருந்தோம். அதைதவிர வேறு சில கருத்துக்களையும் கூறியிருந்தோம், அதன் பிறகு, சில கருத்துகள் தென்னிலங்கையில் இருந்து வெளிவந்துள்ளன அதற்கு பதிலளிக்கவேண்டும்.

எல்லோரும் கூறுவதாக சொல்லவில்லை. தென்னிலங்கையில் சில தீவிர வாத சக்திகள் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக கூறியிருக்கின்றார்கள். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக தவறான கருத்துக்களை ஜனாதிபதியும், கூறியிருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டதையே, தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் கேட்கின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இதை கேட்ட போது நாங்கள் இதை வழங்க வில்லை. அவர்களுக்கு ஒரு முடிவு கட்டியிருக்கின்றோம். இதை வழங்க தயார் இல்லை என்று ஜனாதிபதி  கூறியிருக்கின்றார் என்றும் அவர் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் எதைக் கேட்டார்கள் என்று அவர் சொல்லவில்லை. நாங்கள் எதைக் கேட்டோம் என்று அவர் சொல்லவில்லை.  ஆனால் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில் இவர்களுடைய கருத்துக்கள் அமைகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தினை படித்திருந்தால், நாம் எதைக் கேட்கின்றோம் என்று விளங்கியிருக்க வேண்டும். சில தீவிரவாத சக்திகள் பெரும்பான்மையாக பேசியிருக்கின்ற காரணத்தின் நிமித்தமும், ஜனாதிபதி பேசியிருக்கும் காரணத்தின் நிமித்தமும்,  எமது அரசியல் தீர்வு சம்பந்தமாக எமது நிலைப்பாடு என்ன என்பதை நாம் விளக்க வேண்டிய தேவை இருக்கின்றதாகவும் அவர் கூறினார்.

தமிழ் மக்களிடையே குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில், கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. நாங்கள் எதைக் கேட்கின்றோம் என்று அறிந்திருக்க வேண்டும். ஜனாதிபதி கூறும் கருத்துக்கள் என்ன காரணத்திற்காக கூறப்படுகின்றன என்பது மட்டுமல்ல, அரசியல் தீர்;வு தொடர்பாக விளக்க வேண்டிய தேவை இருக்கின்றதாகவும் அவர் கூறினார்.

ஒரு அரசியல் தீர்வு சம்பந்தமாகவும், தற்போது நடைபெறும், சமூக, கலாசார, பொருளாதார விடயத்தினை குறிப்பிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், ஒருமித்த நாட்டில் உண்மையான , விசுவாசமான அதிகார பகிர்வுக்கான தீர்வினை காண வேண்டும் என்பதனை நாம் வெளிப்படுத்தியிருக்கின்றோம் என்று அவர் கூறினர்.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது தற்போதைய நிலைப்பாடு பற்றியும், எதிர்வரும் காலத்தில் அரசியல் தீர்வினை எவ்வாறு அடையாளம் என்பது பற்றியும் அதை என்ன விதமாக செயற்படுத்தலாம் என்பது பற்றி கூறியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .