2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

AI குறித்து அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 17 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட  விசேட செயலமர்வு நேற்று (16) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

‘AI for Transforming Public Service’  என்ற தொனிப்பொருளில், ஜனாதிபதி  அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பத்து அமைச்சுக்களின் நிறைவேற்று அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர்.

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஆரம்ப பிரவேசமாக, அரச  அதிகாரிகளை அறிவூட்டுதல் மற்றும் தயார்படுத்துதல் மற்றும் அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான அணுகுமுறையை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் செயலாளர்  கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, டிஜிட்டல் மாற்றத்திற்கு  தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாகவும், அரச சேவை அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். 

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் மூலம் அரச சேவையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும்  குறிப்பிட்டார்.

டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய  இந்த செயலமர்வில் முக்கிய உரை நிகழ்த்தினார். இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA)  பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ஹர்ஷ புரசிங்க, ஸமிச அபேசிங்க  செயலமர்வில் வளவாளர்களாக பங்கேற்றனர்.

தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிச்ச, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு    மற்றும் தொழில் அமைச்சின் நிறைவேற்று அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X