2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வலிகாமம் கல்வி வலய ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 08 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


வலிகாமம் கல்வி வலய ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் இன்று ஈடுபட்டார்கள். வலிகாமம் கல்வி வலய ஊழியர்களின் மேசைகள் மற்றும் கணினிகளை வலயக் கல்விப் பணிப்பாளர் அடிக்கடி இடம் மாற்றி வைப்பதனை எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே இந்த பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் புதிதாக நியமனம் பெற்று கடமையாற்றும் சிற்றூழியர்களை பாடசாலைகளின் அதிபர்கள் இன்று காலையில் வலிகாமம் கல்வி வலயத்திற்குச் செல்லுமாறு பணித்தனர்.

அதற்கிணங்க வலிகாமம் கல்வி வலயத்திற்குச் சென்ற சிற்றூழியர்களை, வலயக் கல்விப் பணிப்பாளர் வலயக்கல்வி அலுவலக மூன்றாம்; மாடியின் கணக்குப் பகுதியிலிருக்கும் மேசைகள் மற்றும் கணினிகளை கீழ்ப்பகுதிக்கு மாற்றம் செய்யுமாறு கட்டளையிட்டார்.

சிற்றூழியர்கள் பொருட்களை இடம் மாற்றியபோது, வலயக் கல்விப் பணிமனையில் பணிபுரியும் ஊழியர்கள் பொருட்கள் இடமாற்றுவதைத் தடுத்ததுடன், பணிப்பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் கருத்துக்கூறியதாவது,

சில மாதங்களுக்கு முன்னரே கீழ் பகுதியிலிருந்த கணக்குப்பகுதி மூன்றாம் மாடிக்கு இடமாற்றப்பட்டது.

தற்போது மீண்டும் கீழ் பகுதிக்கு இடம்மாற்றுவது தம்மை அலைக்கழிக்கும் செயற்பாடாகுமென்பதுடன், இப்படி அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் வலயக் கல்வி பணிமனை கணக்காளருக்கும் இடையிலான முரண்பாடே காரணம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வலிகாமம் கல்வி வலயப் பணிப்பாளர் தொடர்பு கொண்டு கேட்டபொழுது,

மூன்றாம் மாடியில் கணக்குப் பகுதி இருப்பதினால் நிர்வாகம் செய்வதில் பிரச்சினைகள் இருப்பதாகவும், அத்துடன் அந்தப் பகுதியில் கடமையாற்றும் ஊழியர்கள் சிலர் தம்மை கீழ்ப்பகுதிக்கு மாற்றம் செய்து தரும்படி கேட்டிருந்ததினாலும் கணக்குப் பகுதியினை கீழ்ப்பகுதிக்கு மாற்றுவதற்காக தன்னால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அத்துடன் உலக வங்கியின் அதிகாரிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி வலிகாமம் கல்வி வலயத்திற்கு வருகை தரவுள்ளதுடன், அவர்கள் கல்வி வலயத்தின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயவுள்ளமையினால், ஒழுங்கமைப்பில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தமையினால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதென்று கூறினார்.

வலிகாமம் கல்வி வலயத்தின் கணக்காளர் விடுமுறையில் சென்றுள்ள நிலையில் தற்போது வருகைதரு கணக்காளர் ஒருவரே பணிபுரிவதாகவும், அவர் கிழமைக்கு இரண்டு தடவைகள் மட்டும் கல்வி வலயத்திற்கு வருகை தருகின்றார். ஆகவே நான் அவருடன் எந்த விடயங்களும் தொடர்பிலும் ஆலோசிப்பதில்லை. அதற்குப் பதிலாக கீழ்நிலைக் கணக்காளர்களுடனேயே ஆலோசனைகளை நடத்துவதினால் தனக்கும் கணக்காளருக்கும் முரண்பாடு இருப்பதாக கூறுகின்றனர்.

தற்போது கணக்குப் பகுதியானது மூன்றாம் மாடியிலேயே இருக்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .