2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மத மாற்றமல்ல, மனமாற்றமே தேவை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.குகன்


தற்போதைய சூழ்நிலையில் சமூகத்திற்கு தேவையானது  மத மாற்றம் அல்லவென்பதுடன், மனமாற்றமேயென சத்தியசாயி பாபா சேவை நிலையத்தின் வடமாகாண இணைப்பாளர் ஆர்.ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார்.

சத்தியசாயி பாபாவின் மாகாசமாதி தினத்தையொட்டி யாழ். மத்திய கல்லூரியின்  ஏற்பாட்டில், மகா சமாதி போதனை சிறப்பு சொற்பொழிவு  அக்கல்லூரி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (25) நடைபெற்றது. இதில் சொற்பொழிவு ஆற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் சொற்பொழிவு ஆற்றுகையில்,

'அன்பின் வெளிப்பாடே  சேவை. பிறருக்கு உதவுவது  முக்கியமானதாகி;றது. ஜெபிக்கும் உதடுகளை விட, பிறருக்கு உதவும் கரங்கள் புனிதமானது. மக்கள் சேவையே மகேசன் சேவை. கோயில்கள், சடங்குகள், கிரியைகளிலிருந்து வெளியே சமூகம் சார்ந்து செயற்பாடுகளை ஆற்ற முன்வரவேண்டும்.

நல்ல மனிதர்களாக வாழ கல்வி அவசியம். பாடசாலை காலத்தை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்தவேண்டும். நல்ல பண்புகள் இருந்தால் தான் ஒழுங்காகக் கற்கலாம்.  கல்வியும் ஒழுக்கமும் மாணவர்களுக்கு அவசியமானது. அத்துடன், கடவுள் வழிபாடும் அவசியம். கடவுள் வழிபாடு 02 வகைப்படுகின்றது. ஒன்று நேரடியாக கடவுளை வழிபடுவது மற்றையது அவதாரங்களை வழிபடுவது. சிறு பிள்ளை தந்தை கை பிடித்து அழைத்து வருதல் இறை வழிபாடு. தகப்பன் சிறு பிள்ளையின் கை பிடித்து வருவது அவதாரம் எனப்படும். அவதாரத்தை வழிபாடாற்ற வேண்டும்.

அவதாரம் இறங்கி வருதல் எனப்படும். தெய்வீகம் மனித உருவில் இறங்கி வருதல் அவதாரம். இது கடவுளை அடைய இலகுவான மார்க்கமாக விளங்குகிறது. இவ்வகையில் அவதாரம் எடுத்தவர் சத்தியசாயி பாபா. 

எல்லாக் கடவுள்களும் ஒன்றுதான். அது போதிப்பது அன்பைத்தான். எல்லோருக்கும் உதவி செய்யுங்கள். எல்லோரையும் மதியுங்கள். மதம் ஆன்மிக வாழ்விற்கு வழிகாட்டுகிறது.  மலைக்கு செல்லும் பாதைகள் தான் மதங்கள். பாதைகள் பல்வேறு இருந்தாலும், அடையும் இடம் ஒன்றுதான். ஆன்மிகத்தை அடைய உள்ளத்தில் அன்பு ஏற்படுதல் வேண்டும்.  எல்லா ஜீவராசிகளிடத்திலும் அன்பு ஏற்படுதல் வேண்டும்.

அவதாரம் உலகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மனிதர்கள் உயிரோடு இருக்கும்போது பேசப்படுவார்கள். இறந்த பின்பு அல்ல. அவதாரம் எடுப்பவர்கள் இறந்த பின்னர் தான் போற்றி வழிபடப்படுவார்கள். மக்களை சரியான வழிகளில் வழிப்படுத்தும் சக்தியுண்டு. அவதாரம் சக்தி வாய்ந்தது. அவதாரத்தின் மூலமான சத்தியசாயிபாபா 82 வருடங்கள் போதித்தார்.

ஆசைகளை அழித்துவிட்டால் ஏற்படும் மனநிலை தான் மோட்சம். வாழ்கின்ற காலத்தில் நல்ல காரியங்களை செய்ய  வேண்டும். தியானம், பஜனை எல்லாம் ஆத்மிக  முடிவல்ல. இவை ஆத்மிகத்தை ஏற்படுத்துவதற்கான கருமங்கள். எப்போதுமே சுயமாக, சுதந்திரமாக சிந்திக்க வேண்டும்.  ஒருவரிடம் அன்பு இருந்தால் அவர் தான் கடவுள்.  எல்லோரும் வாழும்  காலத்தில் உயிர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும்' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .