2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பசு விவகாரம்: திருடிய இருவருக்கு விளக்கமறியல் காணவில்லையென முறைப்பாடு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வேலணை மண்கும்பான பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து இரண்டு பசு மாடுகளைத் திருடி இறைச்சிக்காக வெட்டிய மூவரையும் மே மாதம் 02 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் செல்வாநாயகம் லெனின்குமார் வெள்ளிக்கிழமை (25) உத்தரவிட்டார்.

மேற்படி வீட்டிலிருந்து தலா 20,000 ரூபா பெறுமதியான இரண்டு பசு மாடுகள் திருட்டுப் போயுள்ளதாக வீட்டு உரிமையாளரினால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை (20) முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கிணங்க விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அதே பகுதியினைச் சேர்ந்த மூவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் குறித்த இரண்டு பசு மாடுகளையும் இறைச்சிக்காக திருடியமை தெரியவந்தது.
தொடர்ந்து குறித்த மூவரையும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (25) ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

பசுவை காணவில்லையென முறைப்பாடு

யாழ்.வட்டுக்கோட்டைப் பகுதியில் வயல் ஒன்றில் கட்டப்பட்டிருந்த 15000 ரூபா பெறுமதியான பசு மாட்டினைக் காணவில்லையென மாட்டின் உரிமையாளரினால் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (26) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வயலில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்ட பசு மாடே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மேற்படி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவலாக 10 ஆடுகள் திருடப்பட்டிருந்ததுடன், இந்தத் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என இருவர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழ்.மாவட்டத்தில் இறைச்சிக்காக பரவலாக ஆடு, மாடுகள் திருடப்படும்; சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன், வேலணைப் பகுதியில் இரண்டு பசுக்களைத் திருடி இறைச்சியாக்கிய மூவர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை (25) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .