2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் போராளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்: ஐங்கரநேசன்

Kogilavani   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


'இன்று நடுத்தெருவில் விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்' என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்தார்.

கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றுவதற்காக 16 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (29) வடமாகாண விவசாய அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 6 பேருக்கும் கால்நடைப் பண்ணைப் பணியாளர்கள் 4 பேருக்கும் நீர்ப்பாசனத் திணைக்களப் பராமரிப்புப் பணியாளர்கள் 6 பேருக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'மாகாணசபை அமைக்கப்பட்ட நாள் முதல்; எங்களைச் சந்திக்க வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில்வாய்ப்புக் கேட்டே வருகின்றனர்.

அந்த அளவுக்கு வேலையில்லாப் பிரச்சினை இன்று பெரும் பிரச்சினையாக உள்ளது. இவர்களிலும் முன்னால் போராளிகள் அதிகம் சிரமப்படுகின்றனர்.

முன்னாள் போராளிகளில் பெரும்பாலானவர்கள் கல்வியை இடைநிறுத்திக் கொண்டவர்கள். இவர்களிடம் கல்விச் சான்றிதழ்கள் இல்லாததால் இன்று அரச சேவைகளில் அவர்களால் தொழில்வாய்ப்பைப் பெறமுடியாமல் உள்ளது. போராளிகளாகப் போகாமல் இருந்திருந்தால் இவர்களும் ஏனையவர்களைப் போல உயர்கல்வியை முடித்து பொறியியலாளர்களாகவோ, மருத்துவர்களாகவோ, ஆசிரியர்களாகவோ கூட வந்திருப்பார்கள்.

ஆனால், விடுதலைக்காக புறப்பட்டுத் தங்கள் கல்வியைத் தியாகம் செய்தவர்களை இன்று பயத்தின் காரணமாக எமது சமூகமே அரவணைக்கத் தயங்குகிறது.

முறைசார் கல்வித் தகைமையைப் பெறாவிட்டாலும், இவர்களில் பெரும்பாலானவர்கள் போராளிகளாக இருந்த காலத்தில் பல்வேறு தொழில் துறைகளில் பயிற்சி பெற்றவர்களாகவே உள்ளனர். 

எனவே, தனியார் துறையினராவது நடுத்தெருவில் விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்குத் தொழில்வாய்ப்பில் முன்னுரிமை வழங்க முன்வர வேண்டும்.

இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.ஹால்தின், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் சோ.சிவபாதம், மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் சி.வசீகரன், வடமாகாணசபை உறுப்பினர்கள் இ.ஆர்னல்ட் மற்றும் விந்தன் கனகரத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X