2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அரசின் அடாவடித்தனம் காரணமாக இலவச மூக்கு கண்ணாடிகள் கூட வழங்க முடியவில்லை சி.சிவமோகன் ஆதங்கம்

Kanagaraj   / 2014 மே 17 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

அரசின் காட்டுமிராண்டித்தனம் காரணமாக இலவச மூக்கு கண்ணாடிகள் கூட வழங்க முடியவில்லை என வட மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

உடையார்கட்டு பிரதேசத்தில் இனங்காணப்பட்ட, கண் மற்றும் பார்வைக்கோளாறுகள், குறைபாடுடையவர்களுக்கு நாளை (18)  இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்குவதற்காக நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

எனினும் இராணுவம் மற்றும் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான சில் செயற்பாடுகளால் அதனை ஒத்திவைக்க நேர்ந்துள்ளது.

இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்குவதற்கு உடையார்கட்டு மகாவித்தியாலய மண்டபத்தை பயன்படுத்துவதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரிடம் முறையாக அனுமதி பெறப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந் நிகழ்வானது சாதாரண சமூக சுகாதார மேம்பாடு சம்பந்தமான நிகழ்ச்சியாக இருந்தபோதிலும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் என்பதால், அதனை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மே 18 என்றதும் சிங்கள பௌத்த பேரினவாதிகள் கிலி பிடித்து தொடை நடுங்குவது ஏனோ என்று புரியவில்லை. 

குறித்த ஏற்பாட்டை நிறுத்தி பிறிதொரு நாளில் நடத்துமாறு அப்பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி வலியுறுத்தினார். முறையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளன என்று எம்மால் தெரிவிக்கப்பட்டதற்கு இதனை நடத்த பாதுகாப்பு அமைச்சு அனுமதிக்காது என்ற மிரட்டலே பதிலாக கூறப்பட்டது.

முல்லை வலயக்கல்வி பணிப்பாளருடன் தொடர்பு கொண்ட பொலிஸார், நிகழ்ச்சிகான அனுமதியை இரத்து செய்யமாறு வற்புறுத்தி கோரியுள்ளதோடு, பாடசாலை அதிபரையும் கடுமையாக மிரட்டியுள்ளனர். வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் வடமாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோரின் எழுத்து மூலமான அனுமதியிருந்தும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் வாய்ச்சொல்லுக்கு முல்லை வலயக்கல்வி பணிப்பாளர் கட்டுப்பட்டு அனுமதி மறுத்ததாலேயே குறித்த நிகழ்ச்சி தடைப்பட்டுள்ளது.   

இதுபோதாதென்று, நாளை நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு இன்றே உடையார்கட்டு மகாவித்தியாலயத்துக்கு முன்பாகவும், மகாவித்தியாலய சூழலிலுள்ள வீதிகள் முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு மக்களை வரவிடாமல் தடுப்பதற்கு இன்று காலையிலிருந்து தடைகள் இடப்பட்டுள்ளன.

எமது மக்களுக்கான சாதாரண ஒரு மருத்துவ பணியைக்கூட செய்ய விடாமல் சிறீலங்கா பேரினவாத அரசு தடுப்பதானது, அதன் இனவெறியினதும், அதிகார மமதையினதும் வெளிப்பாடாகும்.

இறுதிப்போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவு கூறும் மே 18 என்ற புனித நாள் தனிச்சிங்கள ஆட்சியாளர்களுக்கு பாவற்காய் போல கசக்கிறது. இந்த கசப்பு மனதுடன் ஒரு நாடு ஒற்றுமையான வாழ்வு என்றெல்லாம் இந்த அரசு பேசுவது வெறும் பசப்பு வார்த்தைகளேயாகும் என்றும் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் கடுமையாக சாடியுள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .