2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'சட்டவிரோத ஆஸி. பயணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது'

Menaka Mookandi   / 2014 ஜூன் 11 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

விழிப்புணர்வு செயற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குப் பயணிப்போர் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவுஸ்திரேலியாவின் இறையாண்மை எல்லை நடவடிக்கைகளுக்கான அமைப்பு குறிப்பிட்டது.

இதனால், கடந்த எட்டு மாதங்களாக சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து படகுகள் மூலம் எவரும் அவுஸ்திரேலியாவிற்கு பயணிக்கவில்லை என அவ்வமைப்பின் ஊடகப் பேச்சாளர் மாட் வார்டெல் இன்று புதன்கிழமை (11) தெரிவித்தார்.

படகுகள் மூலம் அவுஸ்வதிரேலியாவிற்கு பயணிப்பவர்களைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான ஊடகவியலாளர் மாநாடொன்று யாழ். பொது நூலகத்தில் இன்று புதன்கிழமை (11) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இறையாண்மை எல்லை நடவடிக்கைகளுக்கான அமைப்பின், விழிப்புணர்வுச் செயற்பாடுகளினால் அவுஸ்திரேலியாவுக்கான சட்டவிரோதப் பயணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை அரசாங்கமும் அதிகளவான உதவிகளைச் செய்திருந்தது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா பயணிப்பவர்களை பப்பூவா நியூகினியா, நவுறு மற்றும் மார்ஷல் உள்ளிட்ட தீவுகளிலேயே தங்கவைத்துள்ளோம். இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் 1291பேர், கடந்த 12 மாதங்களில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர் என அவர் கூறினார்.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் வருபவர்களை அவுஸ்திரேலியா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. அவ்வாறு வருபவர்களில் பலர், குற்றங்களை இழைத்தவர்களாகவும் ஆட்கடத்தல்காரர்களாகவுமே இருக்கின்றனர். இதனால் உயிரைப் பணயம் வைத்து வந்தாலும் அவுஸ்திரேலியாவில் அவர்கள் குடியமர்தப்படமாட்டார்கள். மாறாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

படித்தவர்களுக்கு வேலையிருக்கின்றது, அவுஸ்திரேலியாவில் வேலை செய்யலாம் என ஆட்கடத்தல்காரர்கள் பொய் வாக்குறுதிகள் வழங்குகின்றார்கள். அதனை நம்பாதீர்கள். அவ்வாறு அவுஸ்திரேலியா அரசாங்கம் கூறவில்லை. 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வந்து, இன்னமும் திருப்பி அனுப்பப்படாமல் இருப்பவர்களையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அவுஸ்திரேலியாவின் சுங்கப் பாதுகாப்புச் சேவையின் அதிகாரி சூ நைற் கூறுகையில்,

இலங்கையின் கடலோர பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துவதற்காக அவுஸ்திரேலியாவினால் இலங்கைக்கு இரண்டு கப்பல்களை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபட்டின் தீர்மானத்துக்கமைய இவ்விரு கப்பல்களும் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன மேற்படி கப்பல்களில் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி இலங்கையிடம் கையளிக்கப்பட்டது. மற்றைய கப்பல் எதிர்வரும் 23ஆம் திகதி வழங்கப்படவுள்ளது என அவர் கூறினார்.

ஆட்கடத்தல், சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் உள்ளிட்டவற்றினை கட்டுப்படுத்தும் நோக்கிலே மேற்படி கப்பல்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், மேற்படி கப்பல்களை கையாள்வதற்காக, இலங்கை மாலுமிகள் குழுவினருக்கு அவுஸ்திரேலியாவில் வைத்து பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தக் குழுவே மேற்படி கப்பல்களை கையாளப் போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X