2025 ஜூலை 09, புதன்கிழமை

உண்மைக்குப் புறம்பான சுவரொட்டி: விந்தன்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

'புலம்பெயர்ந்த மக்கள் தந்த நிதி எங்கே?' என தலையங்கமிடப்பட்டு தனக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியானது உண்மைக்குப் புறம்பான அநாமதேய சுவரொட்டியென வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் திங்கட்கிழமை (25) தெரிவித்தார்.

வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்திற்கு எதிராக யாழ்.மாவட்டத்தின் பல இடங்களிலும் துண்டுப்பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை (24) ஒட்டப்பட்டு இருந்தன.

'புலம்பெயர்ந்த மக்கள் தந்த நிதி எங்கே?' எனத் தலையங்கமிடப்பட்டு இந்தத் துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தது. அதில் 'வடபகுதி மாணவர்களுக்கு சீரானதொரு கல்வி இல்லை என்று கூறி பிரான்ஸ், ஜேர்மன் போன்ற நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட 35 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை வடபகுதி மாணவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதாகக் கூறினாலும் இதுவரை அதை செய்ததாகத் தெரியவில்லை' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சுவரொட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விந்தன் கனகரத்தினம் மறுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் காடையர்களால் வஞ்சகமான முறையில் வெட்டியும் குத்தியும் கொல்லப்பட்ட விடுதலை போராட்டத்தின் முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் உட்பட 53பேர் கொல்லப்பட்ட 31ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் அதை தொடர்ந்து சர்வதேசங்களில் உள்ள எமது கட்சியின் மூத்த உறுப்பினர்களின் ஒன்றுகூடல் நிகழ்வும் கடந்த மாதம் ஜேர்மனியில் உள்ள டோட்மண்ட் நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு நான் சென்றிருந்தேன். குறித்த நிகழ்வுகளுக்குப் பின் அங்கு வசிக்கும் எமது கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் பிரான்ஸ், சுவிஸ் போன்ற நாடுகளுக்குச் சென்ற போது, எமது கட்சி உறுப்பினர்களின் பிள்ளைகளையும் நான் சந்திக்க நேரிட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள வறிய மாணவர்களின் விபரத்தை தந்துதவினால் தாம் அவர்களுக்கும் நேரடியாக உதவலாமென கூறினார்கள்.

அதற்கு 'வடக்கு மாகாணத்திலே தற்பொழுது கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு இருக்கின்றது. அவர்களி;ன் அனுமதியுடன் அவர்களோடு இணைந்தே நீங்கள் இப்பணியை மேற்கொள்ளலாம். நானும் அவர்களோடு இணைந்து ஒத்துழைப்பு தருகின்றேன்' என நான் கூறினேன்.

இந்த விடயங்களை அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலும் நான் பகிரங்கப்படுத்தி இருந்தேன். குறித்த விடயம் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சருக்கும் நான் தெரியப்படுத்தியதோடு அவரும் இந்த விடயத்தை வரவேற்று, பயனாளிகளாக இருக்கும் வறிய மாணவர்களுக்கான உதவி நேரடியாகவே கிடைக்கும்படி வழி செய்து அமுல்படுத்தலாம் என கூறியதோடு இது தொடர்பாக தனக்கு உத்தியோகபூர்வமாக ஒரு கடிதத்தையும் அனுப்பி வைக்குமாறும் பணித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (23) இரவு, எனக்கு எதிராக யாழ் நகரப்பகுதியில் கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகளை சிலர் ஒட்டி இருக்கிறார்கள்.  அச்சுவரொட்டிக்கு உரிமை கோருபவர்களின் முழுப்பெயரையோ முகவரியையோ குறிப்பிடாமல் கடைசியில் கஷ்டப்படும் மாணவர்களின் பெற்றோர் என குறிப்பிட்டு ஆறு பேரின் பெயரை கற்பனையில் எழுதியுள்ளனர்.

வடபகுதியில் கல்வியையும் கலாசாரத்தையும் சீரழித்து விளையாட்டு நிகழ்வுகளில் பியர் டின்களை வழங்கி மாணவர்கள் மத்தியிலே போதைவஸ்துக்களை திணித்து சமூகத்தை சீரழிக்கும் நயவஞ்சக கூட்டத்திற்கும் கைக்கூலிகளாகி காட்டிகொடுக்கும் துரோகக் கூட்டங்களுக்கும் எம்மைப் போன்றவர்களின் மக்களுக்கான சேவையை ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. நன்கு திட்டமிட்டு குழப்புவதிலும் தடுப்பதிலும் குறியாய் இருக்கின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பும் எனது வீடு ஒரு முறை உடைக்கப்பட்டது. வீட்டின் மீது போத்தல்கள் கழிவு ஒயில் போன்றவையும் வீசப்பட்டது. ஒருமுறை சுட முயன்றார்கள். ஒருமுறை துப்பாக்கியை காட்டி மிரட்டினார்கள். இன்னுமொருமுறை யாழ் மாநகர சபைக்குள் ஆறு பேர் துப்பாக்கியுடன் நுழைந்தும் எம்மை அச்சுறுத்தினார்கள். மற்றுமோர் முறை பொலிஸ் பாதுகாப்பையும் மீறி யாழ். மாநகர சபை கூட்ட மண்டப உறுப்பினர்களின் மேசையில் எனக்கு எதிராக அநாமதேய துண்டுப்பிரசுரம் கூட வைத்தார்கள்.

இவற்றை எல்லாம் யார் செய்தார்கள் என அப்போதே ஆதாரத்துடன் நான் அம்பலப்படுத்திவிட்டேன். இந்நிலையில் மீண்டும் என்மீது சேறு பூசும் விதமாக விசமப் பிரசாரத்தினை மேற்கொண்டு எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் அடிப்படையற்ற உண்மைக்கு புறம்பான சில குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள்.

யாழ் நகரப்பகுதியில் சுவரொட்டிகளையும் தீவுப்பகுதியில் துண்டுப்பிரசுரங்களை வீசிச்சென்றதாகவும் அறிகின்றோம். ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக எனக்கூறி புலம்பெயர் மக்களிடமோ அல்லது அங்குள்ள அமைப்புக்களிடமோ 35 சதத்தையேனும் நான் வாங்கவில்லை என உள்ளூர் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளுக்கு விநயமாக தெரிவித்துக்கொள்கிறேன்' என அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .