Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2018 மார்ச் 15 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
“காங்கேசன்துறை பகுதிகளில் 50 வீடுகளில் 111 பொலிஸார் தொடர்ந்து நிலை கொண்டுள்ளனர்” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண முதலமைச்சருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (15 இடம்பெற்றது.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நடேஸ்வரா கல்லூரிக்கு சொந்தமான கட்டடம் ஒன்றையும், பாடசாலை கிணற்றையும் பொலிஸார் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கமால் தம் வசம் வைத்துள்ளார்கள். அது தொடர்பில் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர், தாம் உடனடியாக இன்றைய தினமே பாடசாலை கட்டடத்தையும் கிணற்றையும் கையளிக்க நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்துள்ளார்.
காங்கேசன்துறை பகுதிகளில் 50 வீடுகளில் 111 பொலிஸார் தொடர்ந்து நிலை கொண்டுள்ளனர். 111 பேருக்கு 50 வீடுகள் என்பது அதிகமே. அது தொடர்பில் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் பேசினேன். அதற்கு அவர் கீரிமலை வீதியில் ஒரு காணி பார்த்து உள்ளதாகவும், அதனை பொலிஸ் திணைக்களம் பெற்றுக்கொண்டு அங்கே கட்டடம் அமைக்கப்பட்டதும், தனியார் வீடுகளை மீள கையளித்து விடுவோம் என உறுதியளித்துள்ளனர்.
அத்துடன், யாழ்.மாவட்டத்தில் பல பொலிஸ் நிலையங்கள் தனியார் வீடுகளில் தான் இயங்கி வருகின்றமை தொடர்பிலும் சுட்டிக்காட்டி இருந்தேன். பொலிஸ் நிலையங்கள் அமைப்பதுக்கான காணிகளை பெற்றுக்கொள்வதிலும், கட்டடங்களை அமைப்பதிலும் உள்ள சிக்கல் நிலைமைகளால் தான் அவற்றை கையளிக்க முடியவில்லை என வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களின் போது, பல விடயங்கள் பேசப்பட்டது. அதன்போது யாழில் தற்போது குற்ற செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்பட்டது.
ஆனாலும் சட்டவிரோத மண் அகழ்வுகள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக சில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றை கட்டுப்படுத்த தாம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அவற்றை விரைவில் கட்டுப்படுத்தி விடுவோம் எனவும் தெரிவித்தனர். அத்துடன் போதைப்பொருள் கடத்தல்கள், வியாபாரங்களும் வெகுவாக குறைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீவக பகுதிகளில் இருந்து களவாடப்பட்ட மாடுகள், சட்டவிரோதமாக கடத்தப்படுவது குறித்து பொலிஸ் அதிகாரிகளுடன் பேசினேன். அதற்கு அவர்கள் மாட்டிறைச்சி விற்கப்படுவதால் தான் மாடுகளை இறைச்சிக்கு கடத்துகின்றார்கள். அதனால் மாட்டிறைச்சி விற்க தடை விதித்தால் மாடுகள் கடத்தப்பட மாட்டாது என கூறினார்கள். நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்ய முடியாது. மாட்டிறைச்சியை உணவாக உட்கொள்வோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று அவர்களிடம் கூறினேன். மாடு கடத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் அதிகாரிகள் உறுதி தந்தனர்.
இங்குள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி தெரிந்த பொலிஸாரின் சேவையை நாடி, தமது பிரச்சனைகள் முறைப்பாடுகளை தெரிவிப்பதுக்காக, மணிக்கணக்கில் மக்கள் பொலிஸ் நிலையங்களில் காத்து இருக்கின்றார்கள்.
அதனால் தமிழ் மொழி தெரிந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கடமைக்கு அமர்த்துமாறு கோரினால், தமிழர்கள் பொலிஸில் இணைய தயக்கம் காட்டுகின்றார்கள் என பொலிஸ் தரப்பினர் கூறுகின்றார்கள். தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸில் இணைய வேண்டும் என நான் கூறினால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார். அவருடன் சிலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அந்நிலையில் தற்போது யாழ்.மாவட்டத்துக்கு 81 ஆண்களும் 2 பெண்களுமாக 83 தமிழ் மொழி பேசும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கடமையை பொறுப்பேற்று இருக்கின்றார்கள் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத ஸ்தலங்களில் உச்ச தொனியில் ஒலிபெருக்கி பாவனைகள் காணப்படுவதாக பல முறைபாடுகள் கிடைக்கப்பெற்று உள்ளன. அதனால் வயதானவர்கள், மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அது தொடர்பில் இன்று (15) பொலிஸாரிடம் எடுத்து கூறினேன். இனி அவ்வாறு உச்ச தொனியில் ஒலிபெருக்கி பாவனை இருந்தால், அது தொடர்பில் குற்றவியல் தண்டனை கோவை பிரிவு 98 கீழ் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு கூறியுள்ளேன் என தெரிவித்தார்.
வீதி விபத்துக்கள், வீதி விதிமுறைகளை மீறி செயற்படுவதால் தான் நடைபெறுகின்றது. எனவே வீதி விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக இளையவர்கள் வீதி விதிமுறைகளை கடைப்பிடித்து வீதிகளில் வாகனங்களை செலுத்த வேண்டும்.
அதேவேளை வீதி விதிமுறைகள் தொடர்பில் பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வு செயற்திட்டங்களை பொலிஸார் முன்னெடுக்க உள்ளனர்” என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
2 hours ago