Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் வெட்கம், சூடு சுரணை இருந்தால் சரியான முடிவெடுப்பார்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பருத்தித்துறை வீதியின் கட்டப்பிராய் சந்தியிலுள்ள தன்னுடைய வீட்டில் இன்று நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “நல்லாட்சிக் காலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் இந்த ஆட்சியில் கூடுதலான காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன போன்ற பிரச்சாரங்கள் அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகின்றன.
அதற்கு முன்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரிய போராட்டங்கள் நடைபெற்றிருந்தன. அந்தப் போராட்டமானது மகாவலி அதிகார சபையினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை சுவீகரிக்கின்ற ஒரு திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதென்றும் ஏற்கெனவே மணலாறு பிரதேசம் வெலி ஓயா என்று சிங்களப் பெயர் மாற்றப்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழ் மக்களின் காணிகள் சிங்கள விவசாயிகளுக்கு அல்லது சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றதென்பதாலேயே முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஏனெனில், அதற்கான உறுதிப் பத்திரங்கள் போமிற் போன்றனவும் வழங்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுது வடக்கு கிழக்கைத் துண்டாடும் முகமாக கொக்குளாய் கொக்குத் தொடுவாய், நாயாறு போன்ற பிரதேசங்கைளயும் சுவீகரித்து ஒட்டு மொத்தமாக வடக்கு கிழக்குக்கான நிலத் தொடர்பை துண்டிக்க வேண்டுமென்ற அடிப்படையில் இப்பொழுது மகாவலி அதிகார சபை செய்து வருகின்றது. இதுவொரு பட்டவர்த்தனமான உண்மை. இது எல்லோரும் அறிந்த விடயம்.
ஜே.ஆர். ஜெயவர்தன காலத்தில் காமினி திசாநாயக்க மாகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது வெலி ஓயா மணலாறு என்ற பிரதேசம் மகாவலி எல் வலயமாக உள்வாங்கப்பட்டு அதனை முற்றுமுழுதாக சிங்கள மக்களை குடியேற்றப்படுவதனூடாக வடக்கு கிழக்கு என்பது பிரிக்கப்படும். நிலத் தொடர்பு என்பது துண்டிக்கப்படும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு அதன் பிரகாரம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஆனால், அதற்கிடையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா போன்ற இடங்களில் அவர்கள் மிகவும் பலமான சக்தியாக இருந்ததன் காரணமாக இவர்களால் அந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இன்று புலிகள் இல்லாத காலத்தில் ஏற்கனவே அவர்கள் யோசித்திருந்த விடயங்களை முற்று முழுதாக அவர்கள் நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமையவே தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் எல்லைக் கிராமங்களில் காணிகளைச் சுவீகரிக்கின்ற வேலைகளை மகாவலி அதிகார சபை செய்த வருகின்றது. இதற்கு எதிராகத் தான் மக்கள் போராட்டங்களும் நடைபெற்றது.
ஆனால், எங்களது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இப்பொழுது சிங்களக் குடியேற்றங்கள் இந்த ஆட்சியில் நடக்கவில்லை என்றும் இந்த ஆட்சி சரியான முறையில் செயற்படுகின்றதென்ற தவறானதொரு பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கின்றார். மேலும் இந்த ஆட்சிக்கு ஆதரவாகச் செயற்படுகின்ற கருத்துக்களை அவர் முன்வைத்து வருகின்றார்.
அதனடிப்படையில் இப்பொழுது ஒரு சிலருக்கு மாத்திரம் போமிற் வழங்கப்பட்டிருக்கிறதென்றும் அதனை நாங்கள் நீதிமன்றம் போய் தடுத்து நிறுத்த முடியுமென்றும் இரண்டு மாறுபட்ட கருத்துக்களை சொல்லுகின்றார். அதாவது சிங்களக் குடியேற்றங்கள் நடக்கவில்லை என்றும் சொல்கின்றார். போமிற் கொடுக்கப்பட்டதை நீதிமன்றம் போய் தடுக்க முடியுமென்றும் சொல்கின்றார்.
ஆனால், அவருக்கு இந்த விடயம் நூறு வீதம் வளங்கியிருந்தாலும் கூட இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக குடியேற்றங்கள் நடக்கவில்லை என்று கூறுகின்றார். இது தமிழ் மக்களது குடிசனப் பரம்பலைக் குறைத்து தங்களுடைய சொந்தப் பிரதேசத்திலே அவர்களது இருப்புக்களுக்கு ஆப்பு வைக்கும் அரசாங்கத்தின்ன் சதி வேலைகளுக்கு ஆதரவாகத் தான் இவருடைய கருத்துக்களும் இருக்கின்ற. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழரசுக் கட்சி இவரின் இந்தக் கருத்துக்கள் தொடர்பாக நிச்சயமாக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
முல்லையில் நடைபெற்ற அன்றைய போராட்டத்தில், சேனாதிராசா, சிறிதரன், சரவவணபவன் கலந்து கொண்டனர். ஆனாலும் அன்றை போராட்டத்தில் கலந்து கொள்ளாத சுமந்திரன் குடியேற்றங்கள் நடக்கவில்லை என்று பேசுகின்ற விடயமானது எந்த விதத்தில் நியாயமானது என்பதை கூட்டமைப்பு பகிரங்கமாக தெளிவுபடுத்த வேண்டும்.
இங்கு கேப்பாப்பிலவு, வலி வடக்கை எடுத்துக் கொண்டால் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களையடுத்தே இந்தக் காணிகளை அரசாங்கம் விடுவித்துள்ளது. ஆக அரசாங்கம் தானாக இக்காணிகளை விடுவிக்கவில்லை. இன்னும் கூட பல அயிரம் ஏக்கர் காணிகளை இரானுவம் வைத்திருக்கின்றது. ஆகவே மக்களுடைய பிரதிநிதிகளாக இருக்கின்ற கூட்டமைப்பும் அதன் பேச்சாளராக இருக்கக் கூடிய சுமந்திரனும் இங்கு குடியேற்றம் நடைபெறவில்லை காணிகள் எல்லாம் விடுவிக்கப்பட்டிருக்கின்றதெனக் கூறுவது வேடிக்கையானது.
இந்த அரசாங்கம் வந்தததன் காரணமாகத் தான் இவ்வளவு பெருந்தொகையான மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆட்சி இல்லாவிட்டால் இவ்வளவு பெருமளவிலான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்க முடியாது என்ற தோரணையில் கருத்து தெரிவிப்பது என்பது நிச்சயமாக தமிழ் மக்களுக்கு ஆதரவான அவர்களது உரிமையை வெல்லக் கூடிய உரித்துக்களைக் காப்பாற்றக் கூடிய கருத்துக்கள் அல்ல. மாறாக அரசாங்கத்தை காப்பாற்றக் கூடிய கருத்துக்களாகத் தான் அவை தென்படுகின்றது.
ஆகவே, சுமந்திரனுடைய கருத்துக்கள் அவருடைய கருத்துக்களா அல்லது கூட்டமைப்பின் கருத்துக்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு சம்பந்தனுக்கும் கூட்டமைப்புக்கும் இருக்கின்றது. அதனை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
காலியில் அவர் பேசிய பேச்சில் சமஷ்டி வேண்டாம் என்று சொன்னதும் அதற்கு அவர் திரும்ப யாழில் வந்து தான் அப்படிப் பேசவில்லை சமஷ்டி என்ற சொல்லாடல் தான் தேவையில்லை என்று சொன்னேனே தவிர நான் சமஷ்டி என்ற சொல்லின் உட்கருத்துக்கள் இருக்க வேண்டுமென்று கூறியதாகவும் சொல்லுகின்றார். இதற்க மேலாக இருபது நிமிடங்கள் பேசியதாகவும் பின்னர் கேட்ட கேள்விக்கான பதிலில் தான் சமஷ்டி என்ற விடயத்தில் தமிழ் மக்கள் சமஷ்டி என்ற பெயர்ப்பலகையைத் தான் கேட்கவில்லை என்று கூறியதாகவும் கூறுகின்றார்.
ஆனால், உண்மையில் அவருடைய பேச்சைப் பார்க்கின்ற பொழுது தமிழ் மக்கள் சமஷ்டியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இப்பொழுது இருக்கக் கூடிய 13ஆவது திருத்தத்திற்கு மேலதிகமாக சில விடயங்களைத் தான் கோருகின்றோமே தவிர வேறு விடயங்களை கோரவில்லை என்ற தொனியில் தான் அது அமைந்திருக்கின்றது. இவை சுமந்திரன் இப்பொழுது பேசுகின்ற பேச்சுகள் அல்ல.
மாறாக மிக அண்மையில் ஒரு விடயத்தைக் கூறியிருந்தார். அதாவது புதிய அரசியல் சாசனம் வருகின்ற பொழுது அது சிங்களக் கட்சிகளின் ஒப்புதலுடன் தான் வருகின்றது. ஆகவே தமிழ் மக்கள் எதிர்பார்க்கக் கூடிய முழுமையான அதிகாரங்களை உள்ளடக்கியதாக புதிய அரசியல் சாசனம் இருக்கப் போவது கிடையாது என்ற விடயத்தை முதலே கூறியிருந்தார்.
சமஷ்டி அரசியலமைப்பு முறையென்பதை தமிழ் மக்கள் வலியறுத்தவில்லை. மாறாக அவர்கள் இப்பொழுது இருக்கக் கூடிய 13ஆவது திருத்தத்தில் சில விடயங்களை உள்ளடக்குமாறு தான் கேட்கின்றார்கள் என்றதாகத் தான் அவரின் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. ஆரம்பத்தில் இந்த புதிய அரசியல் சாசனத்திற்கான வரைபு வந்த போது இது சமஷ்டியை ஒத்தது. சமஷ்டிக்கான கருத்துக்கள் இருக்கின்றன என்று பேசினார். ஆனால், பல்கலைக்கழக ஆசிரியர்கள், சிவில் சமூகம், அரசியல் கட்சிகள் அனைத்துமே அது அவ்வாறானதாக இல்லை; தவறானது என்றும் தெரிவித்திருந்தன. இதற்கு மேலாக அரசமைப்பு உருவாக்கத்தில் ஒற்றையாட்சியைப் பற்றித் தான் பேசப்படுகின்றது அங்கு சமஷ்டி என்ற விடயமே இல்லை என்று சொல்லியும் கூட சுமந்திரன் அது சமஷ்டி என்றே வலியறுத்தி வந்தார்.
அதற்குப் பிற்பாடும் கூட சிங்கள மக்கள் முழுக்க முழுக்க எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற விடயத்தைக் கூறி இப்பொழுது சமஷ்டியையே நாங்கள் கைவிட்டு விட்டோம் என்ற அடிப்படையில் அவர் பேசுவதென்பது புதிய அரசியல் சாசனமானது மிக மிக அரை வேக்காட்டுத்தனமான அரசியல் சாசனமாக இருக்குமென்பதை எடுத்துக் காட்டுகின்றது. அதனை மக்களும் ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டுமென்பதற்கான தயார்ப்படுத்தும் நிகழ்ச்சி நிரலை இவர் இப்போதே செய்கின்றாரா என்ற ஒரு கேள்வியம் எழுகின்றது.
ஏனென்றால் இதுவும் கூட கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அது அவரின் சொந்தக் கருத்து என்றும் கூட்டமைப்பின் கருத்துகள் இல்லை என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர். அதனால், பங்காளிக் கட்சித் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தனை நோக்கி இவர்களுக்கு சமஷ்டி என்றால் என்னவென்று விளங்குமா என்று அதிமேதாவித்தனமான கேள்வியைக் கேட்டிருக்கின்றார். அத்தோடு தான் தான் அதிபுத்திசாலி என்றும் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு சமஷ்டி என்றாலே என்னவென்று புரியாது என்றும் சுமந்திரன் கூறியள்ளார்.
ஆனால், சித்தார்தன் என்பவர் தர்மலிங்கத்தின் மகன் என்பதுடன் நீண்டகாலத்தில் போராட்டத்தில் இருந்து வரக் கூடிய ஒருவர். அது மாத்திரமல்லாமல் நாடாளுமன்றம் நியமித்துள்ள குழுக்களில் அதிகாரப் பகிர்வு பற்றி ஒரு குழுவின் தலைவராகவும் சித்தார்த்தன் நியமிக்கப்பட்டிருக்கின்றார். இவ்வாறானவர்களை நோக்கி உங்களுக்கு சமஷ்டி என்றது புரியுமா என்று கேள்வியை அதிபுத்திசாலியான சுமந்திரன் கேட்கின்றார். ஆகவே பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு அவர் கேட்பது புரிகிறதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு வெட்கம், சூடு, சுரணை இது ஏதும் அவர்களுக்கு இருந்தால் அவர்கள் இது தொடர்பாக சரியான காத்திரமான முடிவுகளுக்குப் போவார்கள் என்று தான் நான் நம்புகின்றேன்.
ஆகவே, அந்த வகையில் சுமந்திரன் அண்மைக்காலமாக முன்னெடுத்த அவருடைய செயற்பாடுகள் அனைத்தையும் பார்க்கையில் அவை ஒட்டு மொத்தமாக தமிழ் மக்களுக்கு விரோதமானவை மாத்திரமல்லாமல் அது கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிக் கட்சிக்குள்ளும் மாறுபட்ட சிந்தனை கருத்தைக் கொண்ட ஒருவராகத் தான் அவர் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றார். ஆகவே அவரது சிந்தனை என்பது ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களது சிந்தனை அல்ல. கூட்டமைப்பினுடைய சிந்தனை அல்ல. என்ற இவர்கள் கூறுகின்ற பொழுது இவ்வாறான ஒருவரை எவ்வாறு பேச்சாளனாக கூட்டமைப்பு தொடர்ந்து வைத்திருக்கின்றத என்பதும் எவ்வளவு தூரம் இவரது நடவடிக்கைகள் சரியானதாக இருக்கின்றதென்பதும் பெரியதொரு கேள்வியாக இருக்கின்றது.
யாழில் இடம்பெற்ற ஒரு சந்திப்பில் நீங்கள் சமஷ்டியைக் கைவிட்டுவிட்டீர்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டதற்காக அவர் இந்தக் கேள்வியையே திசை திருப்பி நான் உயர் நீதிமன்றில் ஒரு வழக்கில் வாதாடி சமஷ்டி என்பது தனிநாடு அல்ல என்று வென்றதாகவும் அதனை ஒரு தபால்காரனாக முதலமைச்சர் அவர்கள் எடுத்துக்கொண்டு ஓடிப் போய் கண்டியிலுள்ள தலதா மாளிகையில் கொடுத்ததாகச் சொல்லுகின்றார். உண்மையில் அவர் வாதாடி வென்றாரா இல்லையா என்பதுவல்ல இப்ப இருக்கின்ற பிரச்சனை அவ்வாறு வென்ற ஒருவர் இப்ப என்ன செய்கின்றார் என்பதே கேள்வி.
உண்மையைப் பொய்யாக்குவதும் பொய்யை உண்மையாக்குகின்ற விடயங்களையம் செய்வது ஒரு சட்டத்தரணி. அவர்ககள் ஒரு விடயத்துக்காக வாதாடுவது அவர்களுடைய தொழில். அவர்கள் அந்தத் தொழிலைச் செய்கின்றார்கள் என்பதற்காக அந்தக் கருத்தில் உடன்பாடாக இருக்கின்றார்களா என்பது தான் கேள்வி. அந்தக் கருத்தில் உடன்பாடாக இருப்பராக இருந்தால் நிச்சயமாக சமஷ்டி பற்றி தெளிவான புரிதலை அவர் கொண்டிருப்பார். ஆனால் அவ்வாறு அவற்றை அவர்கள் கொண்டிருக்கின்றார்களா என்று பார்க்க வேண்டும்.
அண்மைக்காலத்தில் அவர் முதலமைச்சர் பற்றி சொல்லக் கூடிய கருத்துக்கள் மிக மிக இழிவானவை. அதுவும் உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்த ஒருவரை மிக மிக இழிவாக தபால்காரனிலும் விட மிக மோசமாக சித்தரிப்பதென்பது நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாதது. முதலமைச்சர் சில வேளை மீண்டும் கூட்டமைப்புக்குள் வந்து விடுவாரா என்ற ஐயப்பாடு அவருக்கு இருக்கலாம். அவர் வந்து விடக் கூடாதென்பதற்காகவே இவரது சிந்தனைகள் இருக்கலாம். அதற்காக அவரை இழிவாக விமர்சிக்கின்றார்.
ஆகவே ஒருவர் மேல் வைக்கக் கூடிய விமர்சனம் என்பது அதுவும் ஒரு கல்விமான் அல்லது நீதியரசர் மேல் வைக்கக் கூடிய விமர்சனத்தை சரியான பாசையில் முன்வைக்க முடியாத சுமந்திரன் ஒரு கீழ்த்தரமான பாசையில் முதல்வர் மீது விமர்சனத்தை முன்வைப்பதென்பது ஏற்புடையதல்ல. அதனை அவர் சொல்வதற்குக் காரணம் தான் சமஷ்டியை வென்றதாகவும் தான் இன்னமும் சமஷ்டியில் பிடிவாதமாகவே இருக்கிறேன் என்ற கருத்தைச் சொல்வதற்காகவே. ஆனால் அவர் அதனைக் கைவிட்டு தமிழ் மக்களும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற தொனியில் பேசுவது எல்லோருக்கும் தெரியும்.
தமிழ் மக்கள் வைத்த அந்த குறைந்தபட்சக் கோரிக்கை என்பது தனிநாட்டைக் கைவிட்டு ஒன்றுபட்ட நாட்டிற்குள் ஒரு சமஷ்டி அரசமைப்பு முறை வேண்டும் என்பதே. ஆனால் இன்றைக்கு சமஷ்டி வேண்டும் என்ற விடயங்கள் எல்லாத்தையுமே கைவிட்டு இவை தொடர்பாக மிக மோசமான கருத்துகளை மக்கள் மத்தியில் முன்வைக்கின்ற நிலைமை தோன்றியிருக்கின்றது. இவ்வாறு இந்த விடயங்கள் நீளக் கயிற்றில் போகுமாக இருந்தால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு எதிரானதை கூட்டமைப்பே சிங்கள மக்கள் மத்தியில் விதைப்பாதாகவே இருக்கும். ஆகவே மக்கள் மத்தியில் இவ்வாறு முன்வைக்கப்படும் கருத்தக்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
இதே வேளை நேற்றையதினம் நண்பர் கஜேந்திரகுமார் ஒரு ஊடக சந்திப்பின்போது ஈ.பி.ஆர்.எல்.எப் என்பது இறுதியாக தமது முதுகில் குத்தியதாக ஒரு கருத்தைச் சொல்லியிருக்கின்றார். ஆனால் நிச்சயமாக அப்படியானதொரு விடயம் இல்லை. நாங்கள் யாருடைய முதுகிலும் குத்த வேண்டுமென்ற அவசியம் கிடையாது. எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டு அந்த இணக்கப்பாட்டை மீறியிருந்தால் சில வேளை அவர் சொல்வது சரியாக இருந்திருக்கும்.
வருடக் கணக்கான முயற்சி செய்தும் இணக்கப்பாடு ஏற்படவில்லை என்பது தான் உண்மையான விடயம். ஆனால், இன்று நாங்கள் ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்க வேண்டுமென்று சிந்தித்திருக்கக் கூடிய வேளையில் ஒரு சிறுபிள்ளைத் தனமான முறையில் கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்த்துக் கொள்வது தமிழ் மக்களுடைய எதிர்காலத்துக்கு ஆரோக்கியமாக இருக்குமென்று தான் நான் கருதுகின்றேன். ஆகவே அவ்வாறான கருத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டியவை.
இந்த நாட்டில் ஒரே ஒர கட்சி தான் புனிதமான கட்சி மற்ற எல்லோரும் துரோகிகள் என்ற அடிப்படையில் பேசுவதென்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமல்ல. யுத்தம் நடந்த கால கட்டம் என்பது வேறு. இன்றிருக்கக் கூடிய கால கட்டம் என்பது வேறு இன்றிருக்கக் கூடிய சூழலில் எவ்வாறு தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்ளப் போகின்றோம். தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான உபாயங்கள் என்ன அதற்கான வழிமுறைகள் என்ன. எவ்வாறு நாங்கள் போனால் இந்த விடயத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது சம்மந்தமான தெளிவான புரிதல் இருக்க வேண்டுமென்று நான் நம்புகின்றேன்.
நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற விடயங்களைக் கிளறி ஒரு வறட்டுத்தனமான வாதங்களை வைப்போமாக இருந்தால் நிச்சயமாக தமிழ் மக்களின் உரிமைகள் என்பது அடிபட்டுப் போய் ஒரு சில கட்சிகளுடைய போட்டா போட்டிகள் என்ற நிலைக்குள் இது வந்து விடலாம். எங்களுடைய நோக்கம் யாவுமே தமிழ் மக்களுக்கு அதிகபட்ச உரிமைகளைப் பெற்றுக்
கொள்வதென்பது. அந்த உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்க நிச்சயமாக எங்கள் உபாயங்கள் தந்திரங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் எவ்வாறான அமைப்பு முறை வேண்டும் என்பதை நாங்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
அதனை விடுத்து ஒவ்வொருவர் மேலும் குற்றச்சாட்டக்களைச் சுமத்துவதும் ஒரு விரோத மனப்பான்மையுடன் நடந்து கொள்வதென்பதும் இன்றைய காலத்திற்கு உகந்ததல்ல என நம்புகின்றேன். நிச்சயமாக அது குழந்தைப் பிள்ளைத் தனமான கருத்துக்களாகவும் தென்படுகின்றது. ஆகவே இவ்வாறான விசயங்களை சம்மந்தப்பட்டோர் புரிந்து கொள்ள வேண்டுமென்பதும் எனது தாழ்மையான கோரிக்கை” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
44 minute ago
50 minute ago
54 minute ago