2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’தடைப்பட்டிருந்த அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்றன’

Editorial   / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

கொரோனா வைரஸால் தடைப்பட்டிருந்த அபிவிருத்தி வேலைகள்  தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

தற்பொழுது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், யாழ். மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் 2  பிரதான திட்டங்கள் அரசாங்கத்தாலும் மேலும் ஒரு திட்டம்  உலக வங்கியின் நிதியீட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றதென்றார்.

இதனைவிட பல திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளனவெனவும் கூறினார்.

“இதில் சப்ரிகம செயற்றிட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 435 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சுமார் 690  மக்களால் இனங்காணப்பட்ட திட்டங்கள் ஏற்கெனவே கடந்த நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டு, இந்த வருடம் 2020இல் நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. 

“அந்த 690 திட்டங்களுக்குமான மொத்த மதிப்பீடு  870 மில்லியன் ரூபாய் இந்த திட்டத்தை கொரோனா காலப்பகுதிக்கு முன்னர் தொடங்கியிருந்தாலும், அதன் பிற்பாடு அந்த வேலைகள் முற்றாக முடிவுறுத்தப்படவில்லை. எனினும் 573 வேலைகள் முடிவுற்றுள்ளன. இதற்கென 245 மில்லியன் ரூபாய் தற்போது வரை செலவிடப்பட்டுள்ளது” எனவும், அவர் கூறினார்.

“மிகுதி வேலைகள் இந்த வருட இறுதிக்குள்  பூர்த்தி செய்யக்கூடியவாறான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன

“அதேபோல, கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 57 திட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளன அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு 21.2 மில்லியன் ரூபா இந்த 57 திட்டங்களில் தற்போது 46 திட்டங்கள் பூரணப் படுத்தப்பட்டுள்ளன. இதற்கென 16 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளன. 

 “இத்திட்டம் பெரும்பாலும் இந்த வருட இறுதிக்குள் பூரணப்படுத்தப்படும். மேலும் கொரோனா தொற்று  மற்றும் நிலைமாறுகால பகுதியில் வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாமை போன்ற காரணத்தால்  திட்டங்களை சீராக நடாத்துவதில்  சிறு தடங்கல் ஏற்பட்டிருந்தது. இருந்தபோதிலும், மிகுதி நான்குமாத காலப்பகுதிக்குள் இந்தத் திட்டத்தை முடிவுறுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

“இதனைவிட தந்திரோபாய நகர அபிவிருத்தி திட்டம்  இது உலக வங்கியின் நிதியீட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்தில்  யாழ். நகரப்பகுதி உள்வாங்கப்பட்டு  வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்கப்படுகின்றன. திட்ட மொத்த மதிப்பீட்டுத் தொகை 7013 மில்லியன் ரூபாய்  நான்கு பிரதான வகையாக  இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

1. வீதி போக்குவரத்து முகாமைத்துவமும் பொது போக்குவரத்து கட்டமைப்பு வசதியையும் மேம்படுத்தல்

2. வடிகாலமைப்பு தொகுதிகளை மேம்படுத்தல், 

3. நகரதரமுயர்த்தல் அதேபோன்று கலாசார பாரம்பரியம் மிக்க இடங்களை பேணி பாதுகாத்தல் 

4. யாழ்ப்பாண மாநகர சபையை வலுப்படுத்தல்

இந்த நான்கு கட்டங்களாக இந்த தந்திரோபாய நகர திட்டமானது யாழ் நகரத்தில் அமுல்படுத்தப்படுகின்றது.

வீதி போக்குவரத்து முகாமைத்துவம் என்ற வகையிலே தற்பொழுது யாழ்ப்பாண நகரத்தை இணைக்கின்ற வகையிலே கச்சாய் - கொடிகாமம்- புலோலி வீதி, தற்பொழுது அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

அதேபோல, யாழ்ப்பாணம் - பொன்னாலை வீதி புனரமைப்பு செய்யப்படுகின்றது. இதனைவிட பொது போக்குவரத்து மற்றும் போக்குவரத்து முகாமைத்துவம் தொடர்பான ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவுகள் யாழ் மாநகரசபை  மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாண நகரத்தில் வீதிப் போக்குவரத்து மற்றும் ஏனைய திட்டங்கள் தொடர்பில் ஆராயப்படும். 

இதனைவிட நகர மய்யத்தில் கலாசார, பாரம்பரியம் மிக்க இடங்களை பேணிப் பாதுகாத்தல் என்ற திட்டத்தின் கீழ், பழைய கச்சேரி மற்றும் பழைய பூங்கா என்பன புனரமைப்பு செய்யப்படவுள்ளன. அதனை அபிவிருத்தி செய்து அதனை நவீன மயப்படுத்தி  பேணுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. 

மேலும், நகர வீதிகளில்  நடைபாதை, சைக்கிள் பாதை போன்றவை உள்ளடக்கப்பட்டு, நகர மக்கள்  பயன்படுத்த கூடிய திட்டமும்  உள்ளடக்கப்பட்டுள்ளது. 

அதனைவிட, 3 பிரதானமான பூங்காக்கள் நகரத்தை மய்யமாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளன. அதேபோல் ஏனைய 6 சிறு பூங்காக்களும் இந்த நகரப்பகுதியில் அமைக்கப்படவுள்ளன. 

யாழ்ப்பாண நகரைப் பொறுத்தவரை பிரதானமாக தேவைப்படுவது, வாகனத் தரிப்பிடம்.  நகரப் பகுதியில் வாகன தரிப்பிடம் மிகவும் கஷ்டமான ஒருவிடயமாக காணப்படுகின்றது. அதனை  பாதுகாப்பான  இடமாக அமைப்பதற்குரிய முன்மொழிவு திட்டத்திலே உள்ளடக்கப்படவுள்ளது. அதாவது, பொது பயன்பாட்டு வாகன தரிப்பிடம்  திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளது. அதனைவிட பொது வசதிகள் ஏற்படுத்துவதற்கும் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தந்திரோபாய நகர அபிவிருத்தி திட்டம் தற்பொழுது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேலும் இந்த திட்டத்தை அடுத்த வருட இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்திருந்தோம் எனவும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .